கோஹினூர் வைரத்தை திருப்பிக் கொண்டு வாங்க! - முக்தா சீனிவாசன் கோரிக்கை!
சென்னை: இங்கிலாந்து நாட்டிடம் உள்ள கோஹினூர் வைரத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று இயக்குநர் முக்தா வி சீனிவாசன் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கை:
பல கோடி ரூபாய் மதிப்புமிக்க கோஹினூர் வைரம் நம் நாட்டில் ஆந்திரா, கோதாவரி நதிக்கரையில் கண்டெடுக்கப் பட்டது.
அப்போது இந்தியாவை ஆண்ட முகலாய அரசு அந்த வைரத்தைக் கைப்பற்றி தனிடம் வைத்துக்கொண்டது. முகலாய அரசின் முடிவுக்கு பின் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் அதை கைப்பற்றி தன்னிடம் வைத்துக் கொண்டது. பின் அதை லண்டன் கொண்டு சென்றது.
சமீபத்தில் லண்டன் சென்ற நான் அதை பார்த்தேன். நம்பொருளை மியூசியத்தில் பார்வைப் பொருளாக வைத்திருந்தார்கள் கண்ணீர் வடித்தேன்.
நாடு திரும்பியதும் அப்போது மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்திடம் சொன்னேன்.
அது என் இலாகா இல்லை, வேறு இலாகா பேரை சொன்னார். அப்படியே செய்தேன் கடிதம் எழுதினேன். கடிதம் வந்த விபரம் மட்டும் வந்தது. வேறு எதுவும் நடக்க வில்லை.
நான் மறுபடியும் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதினேன். அவர் சம்மந்தப்பட்ட இலாகாவுக்கு அனுப்பி அதன் மூலம் அங்கிருந்து கடிதம் வந்தது.
நம் மோடி அரசு, இங்கிலாந்து அரசிடம் கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பி தரும்படி சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கடிதம் வந்துள்ளது".