முல்லைப்பெரியாறு அணை: நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தும் பணிகள் சுறுசுறுப்பு
சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது.
இதையடுத்து அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக ஊழியர்கள் அணையின் மதகுகள் அருகே குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஷட்டர்களுக்கு ஆயில் இடுதல், செடி, கொடிகளை அகற்றுதல் உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இப்பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்பதை அறிய பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து அணையின் நீர் மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இது குறித்து அணையின் என்ஜினீயர் ஒருவர் கூறுகையில், நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து விட்டன. இனி மழை பெய்தால் 142 அடிக்கு தண்ணீரை தேக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.