அண்ணாசாலை புரட்சி.. சீமான் மீது கொலை முயற்சி உட்பட 10 பிரிவுகளில் வழக்கு பதிவு
ஐபிஎல் போராட்டத்தில் காவலரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தாக்கியதை அடுத்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: ஐபிஎல் போராட்டத்தின்போது காவலர்கள் 3 பேர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் வேதனையில் நெருப்பை அள்ளி போடுவது போல் ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நேற்று நடத்தப்பட்டன.
இதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், விவசாய சங்கங்கள், திரைப்பட இயக்குநர்களின் புதிய அமைப்பு, ரஜினி மக்கள் மன்றம் ஆகியன போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேரிகாடை தாண்டி போராட்டக்காரர்கள் முன்னோக்கி ஓடி வந்தபோது சீமான் உள்ளிட்டோரை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.
|
வீடியோ காட்சிகள்
இதனால் ஆத்திரமடைந்து நாம் தமிழர் கட்சியின் கொடியுடன் சிலர் சீருடையில் இருந்த உதவி ஆய்வாளர் மற்றும் இரு காவலர்களை கடுமையாக தாக்கியதாக வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு ரஜினிகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 பேர் மீது வழக்கு
தன் மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 10 பேர் மீது அந்த காவலர் புகார் கொடுத்தார். இதையடுத்து சீமான் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சீமான் உள்ளிட்டோர் கைது?
ஆனால் காவலரை தாக்கியது தங்கள் கட்சியினர் இல்லை , வேறு கட்சியினர் என்று நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்தனர். இந்நிலையில் சீமான் உள்ளிட்டோர் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலணி வீச்சு
ஏற்கெனவே நாம் தமிழர் கட்சியினர் மைதானத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், காலணியை மைதானத்தில் வீசியதாகவும் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.