இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எனது குறிக்கோள்... இது தீபாவின் சபதம்
இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எனது குறிக்கோள் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.
சென்னை : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதே தமது குறிக்கோள் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் - அம்மா- தீபா பேரவை என்ற புதிய அமைப்பை அதிகாரப்பூர்வமாக இன்று தீபா தொடங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :
ஜெயலலிதா பிறந்தநாளில் அரசியல் பயண முடிவை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன். எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இன்று முதல் அதிகாரபூர்வமாக தொடங்குகிறோம். ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக நான் இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்பியதை அடுத்து இந்த இயக்கத்தை ஆரம்பிக்கிறேன்
ஏழை,எளியவர்களின் துயர்துடைக்கும் பாதையில் எங்கள் பயணம் அமையும். தமிழகத்தில் நிலையான ஆட்சியையும்,ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்குவோம்,
ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற பாடுபடுவோம். தூய்மையான எண்ணத்துடன் நான் சேவை செய்ய வந்துள்ளேன். மக்கள் ஏற்றுக்கொள்பவர்கள் தான் தொண்டு செய்ய முடியும்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மீட்பதே எங்களது குறிக்கோள். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அரசியல் பணி தொடரும்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானதே. நான் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளேன்.
இவ்வாறு தீபா கூறினார்.