ஆர்கே நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை- பாஜக முகத்தில் கரியை பூசிய ரஜினிகாந்த்!
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவித்து பாஜகவின் முகத்தில் கரியை பூசிவிட்டார் ரஜினிகாந்த்.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தாம் யாருக்கும் ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்து பாஜகவின் முகத்தில் கரியைப் பூசிவிட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழகத்தில் நேரடியாக காலூன்ற முடியாத ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி. இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏதாவது ஒரு குறுக்கு வழியை கையாள்வதையே தொழிலாக வைத்திருக்கிறது பாஜக.
ரஜினி சந்திப்புகள்...
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒவ்வொரு தேர்தலின் போதும் தோற்றத்தை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறது பாஜக. தேர்தல்களின் போது டெல்லி தலைவர்கள் அல்லது தமிழக தலைவர்கள் திடீரென ரஜினிகாந்த் வீட்டுக்கு போய் சந்திப்பர். உடனே ரஜினிகாந்த் ஆதரவு எங்களுக்கே என பிரசாரத்தை கட்டவிழ்த்துவிடுவர்.
கங்கை அமரன் சந்திப்பு
இதேபாணியில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் பின்பற்ற முயற்சித்தது பாஜக. அக்கட்சியின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் கங்கை அமரன் திடீரென ரஜினிகாந்தை நேற்று சந்தித்து பேசினார்.
ரஜினி ஆதரவு தெரிவிச்சுட்டாரே...
இச்சந்திப்புக்குப் பின்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ரஜினிகாந்த் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என அடித்துவிட்டார். தமிழிசையின் இந்த அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
|
முகத்தில் கரியை பூசிய ரஜினிகாந்த்
இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் வரும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தை ஒவ்வொரு தேர்தலிலும் வளைத்துப் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் பாஜகவின் முகத்தில் கரியை பூசிவிட்டார் ரஜினிகாந்த் என்றே சொல்ல வேண்டும்.