பக்தர்களின் நோய்கள்,பிணிகளை கண்களால் தீர்க்கும் மயிலை கோலவிழி பத்ரகாளியம்மன்
கோலவிழி அம்மன் பெயருக்கு ஏற்ற அழகிய பெரிய கண்களை உடையவள். பாவம் போக்கும் பத்ரகாளியாக மயிலாப்பூரில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள் அன்னை.
சென்னை: மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. தன்னுடைய அருட் பார்வையினால் பக்தர்களை காத்தருளும் இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது.
சென்னையில் காவல் தெய்வமாக போற்றப்படும் கோல விழியம்மன் ஆலயம் இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்கின்றனர். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் அகண்ட கண்களால் நோக்கி போக்குகிறாள் அன்னை. ஆடி செவ்வாய் தினமான இன்று கோலவிழியம்மனை தரிசிப்போம்.
அழகிய ஆலயம்
வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன.
பத்ரகாளியம்மன்
அம்மனின் இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். பத்ர என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். ஸ்ரீபத்ரகாளி உக்கிர தெய்வம். ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு, தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது.
அருள்மழை பொழியும் அன்னை
இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன. அமர்ந்த கோலத்தில் இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் அமர்ந்துள்ளாள் அன்னை.
கோலவிழியம்மன்
அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். அன்னையின் கண்களைக் காண கண் கோடி வேண்டும். பத்ரகாளியை குளிர்விக்க, கோலவிழி அம்மனின் விக்கிரகத்தை வைத்து வழிபடுவதாகச் சொல்கின்றனர். அபிஷேகம் முழுவதும் கோலவிழி அம்மனுக்கே!. பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது என்றாலும் அருள் மழை பொழிவதில் இவளுக்கு நிகர் யார் உண்டு என்கின்றனர் பக்தர்கள்.
ஆமை சிற்பம்
தீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம்.
தீவினைகள் விலகும்
பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் மனம் உருக வேண்டி ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வலமாக 27 சுற்றும் இடமாக இரண்டு சுற்றும் சுற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
ராகுதோஷம் நீங்கும்
திருமணப் பேறு, குழந்தைப் பேறு, குடும்பச் சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி மற்றும் ராகு தோஷம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வ மாகக் கோலவிழி அம்மன் விளங்குகின்றாள். ராகுதோஷம் உள்ளவர்கள் கோலவிழி அம்மனையும், இங்குள்ள வராகியையும் வழிபட்டு சிறப்பான பலன் பெறலாம்.
பிரச்சினைகளுக்கு பூட்டு
பக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.
எங்கு உள்ளது
சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் கோலவிழியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அதேபோல, முண்டகக் கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.