கடையநல்லூரில் மீண்டும் பரவும் மர்ம காய்ச்சல்: அச்சத்தில் மக்கள்
கடையநல்லூர்: கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் 50க்கும் மேற்பட்டோர் கடையநல்லூர், தென்காசி, நெல்லை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு திடீரென பரவிய மர்ம காய்ச்சலால் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மர்ம காய்ச்சலுக்கு சிலர் உயிர் இழப்பது வாடிக்கையாகிவிட்டது.
இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க 2009ம் ஆண்டு புனே, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தினர் கடையநல்லூருக்கு வந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து ராட்சத கொசு ஒழிப்பு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு நகர பகுதிகளில் கொசுக்குள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 7 நாட்களாக கடையநல்லூர் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்ப்பட்டோர் கடையநல்லூர், தென்காசி ,நெல்லை ஆகிய ஊர்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்கள் கடையநல்லூர், தென்காசியில் இதற்கான உரிய சிகிச்சை இல்லாத நிலையில் மதுரை, நெல்லை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. சிகிச்சைக்கு சுமார் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது என்று கூறப்படுகிறது.
எனவே காய்ச்சலை தடுக்கவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் கடையநல்லூரில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ முகாமை நடத்த வேண்டும், டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் தனி
பிரிவை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.