வன்முறையில் ஈடுபட்டது கதிராமங்கலம் கிராமத்தினர்தான்.. மக்களைக் குற்றம் சாட்டுகிறார் முதல்வர்!
கதிராமங்கலம் கிராமத்தில் மக்கள் வன்முறையில் ஈடுபட்டதாலேயே போலீசார் குறைந்த அளவு தடியடி நடத்தியதாக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: கதிராமங்கலத்தில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுப்பட்டதால் காவல்துறை தடியடி நடத்தினர் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்எல்ஏ கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை தெரிவித்தார்.
கதிராமங்கலம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டதால் பதற்றம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விரட்டி விரட்டி போலீசார் தாக்கினார். பலரை கைது செய்தனர்.

கைது செய்தவர்களை விடுதலை செய்யக் கோரி 3 நாட்களாக கிராம மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கதிராமங்கலம் பிரச்சினை இன்று சட்டசபையில் எதிரொலித்தது. திமுக எம்எல்ஏ கோவி. செழியன் சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
போலீசாரை திரும்ப பெற வேண்டும், கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோவி செழியன் கேட்டுகொண்டார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். ஓஎன்ஜிசி பணிகளை மக்கள் தடுத்தனர். வன்முறையில் ஈடுபட்டனர். இதற்குப் பிறகே போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை குறைந்த பலப் பிரயோகம் செய்யப்பட்டது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications