மழைக்காலத்தில் மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் இவைதான்.. சீமான் அறிக்கை
தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள் குறித்த அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் செய்ய வேண்டிய முதன்மைப் பணிகள் குறித்த அறிக்கையை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு இருக்கிறார். இதில் மக்கள் மழையில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கினால் சென்னை மாநகரம் முழுக்கப் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு, சாலை முழுக்க வெள்ளக்காடாய் மாறியிருக்கிறது என்று வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.
மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சேர்ந்து, அவை வீடுகளிலும் புகுந்திருக்கிறது.
இதனால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகிறது. இவையாவும் ஒரே ஒரு நாள் கொட்டித்தீர்த்த மழையினால் விளைந்தவையே. இதையடுத்து இதிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்,
மழைநீர் உட்புகாத வீடுகளில் வசிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில், பாதுகாப்பான இடங்களுக்குப் பயணப்படுங்கள். மழைநீர் உட்புகுக்கூடிய பகுதிகளில் வசிப்போர் கட்டிடத்தின் முதல் தளத்தில் வசிப்பதை முடிந்தளவு தவிர்த்து விடுங்கள்.
உணவுப் பொருளில் கவனம் செலுத்த வேண்டும்
குடிநீரை காய்ச்சி வடிகட்டிப் பருகுங்கள். நிலவேம்புச்சாறை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பருகுங்கள். பால், ரொட்டி போன்ற உணவுப்பொருட்களைக் கூடுதலாக வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். குளிர்ச்சியான திரவப்பானங்களை அருந்துவதைத் தவிருங்கள். மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, கைவிளக்கு, போர்வை போன்றவற்றை அதிகப்படியாய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
உடலை கவனிக்க வேண்டும்
காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கான மருந்துப்பொருட்களையும், மாத்திரைகளையும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். மழை நேரங்களில் மிக அத்தியாவசியத் தேவைகளுக்காக அல்லாது வேறு எதற்காகவும் வெளியில் செல்வதைத் தவிருங்கள். அலைபேசியில் மின்சக்தியை தேக்கிவைத்துக் கொள்ளுங்கள். மின்தேக்கி (POWER BANK) ஒன்றையும் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
மின் சாதங்களை கவனமாக கையால் வேண்டும்
இடி, மின்னல் ஏற்படும்போது தொலைக்காட்சி, அலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே மழைநேரங்களில் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். மின் புரட்டியை (INVERTOR) தொடவோ, இடமாற்றம் செய்யவோ முயற்சிக்காதீர்கள்.
சுத்தம் மிக முக்கியம்
காலணி அணியாது வீட்டைவிட்டு வெளியே செல்லாதீர்கள். குடையையோ, மழைக்கவச ஆடையையோ எப்போதும் உடன் வைத்திருங்கள். ஈரம் படர்ந்த கையுடன் மின்சாரச் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிருங்கள். குழந்தைகளை மின்சாதனங்கள் அருகே செல்ல அனுமதிக்காதீர்கள். கொசுக்கள் உட்புகாவண்ணம் தடுக்கச் சன்னல்களை இறுக மூடி வையுங்கள். உடலை முழுமையாக மறைக்கிற பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
சாலைகளில் கவனம் வேண்டும்
சாலைகளில் நடந்து செல்லும்போது பாதாளச்சாக்கடை திறந்திருக்கிற வாய்ப்பிருப்பதால் மிகக்கவனமாகச் செல்லுங்கள். சுரங்கப்பாதைகளைத் தண்ணீர் தேங்கி நிற்கும்போது பயன்படுத்துவதைத் தவிருங்கள். வாகன ஓட்டிகள் முடிந்த அளவு சாலையின் நடுவே பயணியுங்கள். இரு ஓரங்களிலும் எதிர்பாராத பள்ளங்கள் உருவாகியிருக்கக்கூடும்.
புகார் அளியுங்கள்
உங்கள் தெருவில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக நகராட்சிக்குத் தகவல் தெரிவித்து, அதனை அகற்றக் கோருங்கள். மேலே கூறப்பட்டிருக்கிற அடிப்படையானவற்றை அவசியம் பின்பற்றுங்கள். நம்பிக்கையோடும், விழிப்போடும் நாட்களை நகர்த்துங்கள். இக்கடின சூழலையும் மிக எளிதாய் நம்மால் கடக்க இயலும் என்று அவர் கூறியிருக்கிறார்.