அக்டோபர் 18-ம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தினம் ஒரு பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத நடிகர் சங்கத் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
நடிகர் சங்க தேர்தலை கடந்த ஜூலை மாதம் 15-ந்தேதி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். வேட்பாளர்களுக்கு விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன.
இதை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து, தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் ஆணையராக அறிவிக்கப்பட்டார்.
அவர் நடிகர் சங்க தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். தேர்தலை எங்கு நடத்தலாம் என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்டவர்கள், நடிகர்கள், மற்றும் திரையுலக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தேதியை நீதிபதி பத்மநாபன் இன்று அறிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடிகர் சங்க தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 18-ந்தேதி நடைபெறும். மயிலாப்பூர் செயிண்ட் எபாஸ் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 3,139 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள்," என்று தெரிவித்துள்ளார்.
இந்ததே தேர்தலில் இப்போதைய தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும், விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் அதற்கு எதிர் அணியாகவும் களமிறங்குகின்றனர்.