முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த வழக்கு: தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு
சென்னை: முன்கூட்டி தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினி தற்போது வேலூர் சிறையில் உள்ளார். ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 1998-ஆம் ஆண்டு நளினிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
பின்னர் தமிழக அரசு கடந்த 2000-ம் ஆண்டு, அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி, நளினிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்த 2,200 ஆயுள்தண்டனை கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது.
இதே அடிப்படையில், கடந்த 25 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் தன்னையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஜூன் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 27-க்கு தள்ளிவைத்து, மனு தொடர்பாக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் உள் துறை துணைச் செயலாளர் டி. டேனியல் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த பதில் மனுவில், தமிழக அரசால் கடந்த 1994-ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது.
இதில், பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 20 ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் என்று அரசாணை தெரிவிக்கிறது. இதன்படி, மனுதாரர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளதால், தன்னை முன் கூட்டியே விடுதலை செய்யுமாறு கோரியுள்ளார்.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கை, மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரித்து வந்ததால், 1994-ஆம் ஆண்டு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையின் கீழ், முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு மனுதாரர் உரிமை கோர முடியாது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் முன்பு மத்திய அரசின் கருத்தை அரிய வேண்டும் என்பதற்காக, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால், மத்திய அரசானது உரிய பதிலளிக்கவில்லை.
மாறாக, தமிழக அரசின் கடிதத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வானது, முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பன உள்ளிட்ட 7 கேள்விகளை எழுப்பியதோடு, அரசியல் சாசன அமர்வுக்கு அந்த வழக்கை மாற்றம் செய்தது.
அந்த அமர்வானது, 2014-ஆம் ஆண்டு ஜூலையில் மாநில அரசுகள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்வதற்கு தடை விதித்தது. இதன் பின்னர் அந்த உத்தரவில் ஒரு சில மாற்றங்களை செய்து, வழக்கை உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றியது.
இந்த வழக்கு, இன்று வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடவில்லை. ஆகையால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின் வழக்கில் ஒரு முடிவு எட்டும் வரை, இந்த வழக்கில் நளினி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை நீதிபதி சத்தியநாரயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.