தாமிரபரணியை காக்க வாருங்கள் இளைஞர்களே... அழைக்கிறார் நல்லக்கண்ணு
வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியைக் காக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி : தாமிரபரணியில் பன்னாட்டு குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க அனுமதி அளித்தால் குடிநீர் பிரச்சினை ஏற்படும். 5 மாவட்ட விவசாயம் பாதிக்கப்படும் எனவே
இளைஞர்களே தாமிரபரணியைக் காக்க வாருங்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்படும் தனியார் கோக், பெப்சி குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துகோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து தாமிரபரணியில் இருந்து தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கதடை விதிக்கக்கோரி கடந்த நான்கு நாட்களாக போராட்டங்கள் நடந்துவருகிறது. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பங்கேற்றார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தாமிரபரணியைக் காக்க சட்டப்போராட்டம் நடத்தினோம் ஆனால் நீதி கிடைக்கவில்லை.
மாணவர்கள், இளைஞர்கள்தான் தாமிரபரணியைக் காக்க முன்வரவேண்டும் என்று கூறினார். பாபநாசத்தில் உற்பத்தியாகி வற்றாத ஜீவ நதியாக பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் நமது நதியை குளிர்பான ஆலைகளுக்கு தாரை வார்த்து விட்டோம்.
பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சுகின்றனர். தடுப்பணை கட்டியதால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாழாகிவிட்டன. எதிர்கால சந்ததியினர் காக்கப்பட வேண்டுமெனில் தாமிரபரணியில் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.