பணம் எடுப்பதற்கான படிவத்தில் சாதியை கேட்பது ஏன்? ஆர்.நல்லகண்ணு கேள்வி
வங்கிகளில் பணம் எடுப்பதற்கான படிவத்தில் சாதி விவரத்தை கேட்பது என கேள்வி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு எழுப்பியுள்ளார்
சென்னை: வங்கிகளில் பணம் எடுப்பதற்கான படிவத்தில் சாதி விவரத்தை கேட்பது ஏனென்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகவும், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். இது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
மேலும், வங்கிகளுக்கு பணம் எடுக்கச் சென்றால் அதற்காக கொடுக்கப்படும் விண்ணப்பங்களில் தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இதனை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.