கோபாலபுரத்துக்கு சென்ற நல்லக்கண்ணு, முத்தரசன்: வரவேற்று புன்னகைத்த கருணாநிதி
கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்களான நல்லக்கண்ணுவும், முத்தரசனும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க சென்றனர்.
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவும், கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
கடந்த ஆண்டு முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். அரசியல் நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலினுக்கு அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
உடல்நிலையை கருத்தில் கொண்டு முரசொலி பவள விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரது உடல்நலம் தேறி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முரசொலி அலுவலகத்திற்கு சென்றார்.

இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
சென்னையில் தினத்தந்தி பவளவிழா மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரி சோமநாதன் வீட்டு திருமண விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள கடந்த 6-ஆம் தேதி சென்னை வந்திருந்தார் நரேந்திர மோடி.

டெல்லிக்கு வர அழைப்பு
கோபாலபுரத்திற்கு சென்ற மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் டெல்லியில் தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறும் கருணாநிதிக்கு மோடி அழைப்பு விடுத்தார்.

கையசைத்து புன்னகைத்த கருணாநிதி
அன்றைய தினமே வீட்டு வாயிலில் கூடிய தொண்டர்களை பார்த்து கையசைத்து புன்னகைத்தார் கருணாநிதி. இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கருணாநிதியை சந்திப்பு
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவும், கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் கோபாலபுரத்திற்கு சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் வெளியே வந்த நல்லக்கண்ணு செய்தியாளர்களை சந்தித்தார்.

அடையாளம் கண்டு புன்னகைத்தார்
நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை சந்தித்ததில் மகிழ்ச்சி, அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டு சிரித்தார் என்று அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

கருணாநிதியுடன் சந்திப்பு
இதேபோல் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும், மனைவி ராதிகாவும் கோபாலபுரத்துக்குச் சென்று கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். கடந்த 1998-ஆம் ஆண்டு திமுகவில் உறுப்பினராக இருந்தார் சரத்குமார். பின்னர் 2007-ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார் சரத்குமார்.












Click it and Unblock the Notifications