காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!...கதறும் நல்லாண்டார்கொல்லை கிராம மக்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கழிவுத் தொட்டியில் தீ விபத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
புதுக்கோட்டை: ஓஎன்ஜிசியின் எண்ணெய் கழிவு தொட்டியில் ஏற்பட்ட தீ கொழுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்து அந்த கிராமத்து மக்கள் எங்களை காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறினர்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படத்தக் கூடாது என்று வலியுறுத்தி அந்த கிராம மக்கள் தொடர்ந்து 157 நாட்களாக போராடி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த அச்சத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது நல்லாண்டார் கொல்லையில் நேற்று நடந்த தீ விபத்து. நல்லாண்டார் கொல்லையில் குடியிருப்பு மற்றும் விளைநிலங்கள் உள்ள பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறு உள்ளது.
கொழுந்து விட்டு எரிந்த தீ
இந்த கிணற்றின் அருகே உள்ள கழிவுகளை சேகரிக்கும் தொட்டியில், திரவ வடிவில் கழிவுகள் நிரப்பப்பட்டு பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்களை போட்டு மூடி வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
சுகாதாரப் பிரச்னை
இதனால் அதிர்ச்சியடைந்த கிராமத்து மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். எண்ணெய் கழிவு தீ விபத்தால் பல அடி தூரத்திற்கு கரும்புகை ஏற்பட்டது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகவும், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கதறும் தாய்
பற்றி எரியும் தீயை பார்த்து கதறி அழும் தாய் ஒருவர், எங்களை இந்த தமிழகத்தில் காப்பதற்கு யாரும் இல்லையா. நாங்கள் இங்கு வாழ்வதா வேண்டாமா, எங்களைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறினார். எல்லோரும் பார்த்துவிட்டு தான் செல்கின்றனர், எங்க ஊர் அழிந்துவிட்டது, நாங்க என்ன செய்வோம் என்று கண்ணீர் வடிக்கிறார்.
இது தான் பாதுகாப்பா?
மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்றே தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. மக்கள் எதிர்ப்பையும் மீறி தங்களது பணியையும் அவை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அசாதார சூழலில் தீ விபத்து போன்ற செயல் ஏற்பட்டால் அதில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும், உடனடியாக என்ன செய்யவேண்டும் என்றும் கூட அவர்களுக்கு தெரியப்படுத்தாதது தான் எண்ணெய் நிறுவனங்கள் செய்யும் விழிப்புணர்வா என்ற கேள்வியும் எழுகிறது.