ஒரே நேரத்தில் சீலிடப்பட்ட 156 பார்கள்.. அமைச்சருடன் பார் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை : நாமக்கலில் சீலிடப்பட்டுள்ள டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசுடன் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 165 டாஸ்மாக்குகளில் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. டெண்டர் முறையில் பார்கள் வைத்துக் கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டெண்டர் காலம் நேற்றோடு முடியும் நிலையில் கடந்த வாரத்தில் இதற்கான ஏல தேதி அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த டெண்டரை பார் உரிமையாளர்கள் புறக்கணித்ததாக தெரிகிறது. மாதாந்திர வரியுடன் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டதால் உரிமையாளர்கள் டெண்டரை புறக்கணித்தனர். இதனையடுத்து டெண்டர் காலமும் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில் அதிகாரிகள் நேற்று சுமார் 165 பார்களுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
ஒரே நேரத்தில் 165 பார்களையும் அதிகாரிகள் மூமூடிய நிலையில் டெண்டரில் ஏலம் எடுக்கப்பட்ட 9 பார்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. பாரை ஏலத்தில் எடுக்க 12 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி செலுத்த முடியாது என்று பார் உரிமையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், இதனை பரிசீலிக்க முடியாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால், பார்கள் சீலிடப்பட்டன.
இந்நிலையில் நாமக்கல் பார் உரிமையாளர்கள் சென்னையில் அமைச்சர் தங்கமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உயர்த்தப்பட்ட பார் கட்டணத்தை குறைக்க முடியாது என்று அமைச்சரும் கைவிரித்துவிட்டதோடு பார்கள் 10 நாட்கள் மூடியே இருக்கட்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துவிட்டதாக பார் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.