நாமக்கலில் பஸ் ஸ்டாண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது... அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இல்லை!
நாமக்கலில் பேருந்து நிலைய கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
நாமக்கல்: நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள 2 கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பேக்கரி மற்றும் பழக்கடையின் மேற்கூரை பூச்சு இன்று காலையில் இடிந்து விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதம் ஏற்படவில்லை என்றாலும் 2 கடைகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

கோவையில் கடந்த செப்டம்பர் மாதம் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் கல்லூரிப் பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மழை காரணமாக இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது. இதே போன்று அக்டோபர் மாதத்தில் நாகை மாவட்டம் பொறையார் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையின் ஓய்வு அறையின் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் ஓய்வறைக்குள் உறங்கிக் கொண்டிருந்த 9 பேர் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடந்த பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மக்களை அச்சமடையச் செய்த நிலையில் இன்று மீண்டும் நாமக்கல் பேருந்து நிலையத்திலும் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிலையங்களின் உறுதித் தன்மைகுறித்த ஆய்வுகளை அரசு தொடங்க வேண்டிய தருணம் இது என்பதையே அடுத்தடுத்த சம்பவங்கள் உணர்த்துகின்றன. பெரிய அளவிலான உயிரிழப்புகளை தமிழகம் சந்திக்கும் முன் அரசு விழித்து பழமையான கட்டிடங்களை புனரமைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications