திண்டுக்கல்லை கிராஸ் செய்த முதல்வர் எடப்பாடி.. எட்டிப்பார்க்காத 'நத்தம்’ அணி!
திண்டுக்கல் மாவட்டம் வழியாக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த வரவேற்பில் நத்தம் விஸ்வநாதன் தரப்பு பங்கேற்கவில்லை.
சென்னை: பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு சென்றுவிட்டு சாலை மார்க்கமாக சேலம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல், வேடசந்தூரில் அதிமுகவினர் வரவேற்பளித்தனர். ஆனால் துணை முதல்வர் ஓபிஎஸ் அணியில் உள்ள நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எட்டிப் பார்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார். பின்னர் அங்கிருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக சேலம் சென்றார். திண்டுக்கல் மாவட்ட எல்லையான பாண்டியராஜபுரம், தோமையார்புரம், வேடசந்தூர் ஆகிய இடங்களில் அதிமுகவினர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பளித்தனர்.

இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். தோமையார்புரம் வரவேற்பின் போது அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற முடியாமல் நெரிசல் ஏற்பட்டது. அப்போது மைக் பிடித்த அதிமுக நிர்வாகி, முதல்வர் எடப்பாடியாருக்கு வழிவிடுங்கள்..வழிவிடுங்கள் என கூறி சிரிப்பை வரவழைத்தார்.
இந்த நிகழ்ச்சிகள் எதிலும் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் எவருமே கலந்து கொள்ளவில்லை. என்னதான் அதிமுக அணிகள் இணைந்தாலும் இன்னமும் ஒட்டாமலேயே இருக்கிறார்கள் என்பதைத்தான் முதல்வர் எடப்பாடியாருக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.












Click it and Unblock the Notifications