சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைகிறது... மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!
சென்னை முழுவதும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: தொடர் மழையில் சிக்கியுள்ள சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளன.
அதிகாரிகள் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அந்தந்த பகுதிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தலைமையில் மீட்புப் பணியில் துரித கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோபலாபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம், எழும்பூர் எத்திராஜ் கல்லூரி மாணவிகள் விடுதி, சோழிங்கநல்லூர் புனித ஜோசப் கல்லூரி விடுதிகள் ஆகியவற்றில் மழைநீர் புகுந்துள்ளது.

மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். அதில், மீட்புப்பணிகள் எல்லா இடத்திலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் மின் மோட்டார் கொண்டு நீரை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் களத்தில் உதவி வருவதாகவும், இன்னொரு குழு அரக்கோணத்தில் இருந்து விரைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு 112 அழைப்புகள் வந்திருப்பதாகவும் அதில் 80 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications