பீர் வாங்கும் காட்சியில் நடிப்பதா? வேலூரில் நயன்தாரா உருவ பொம்மை எரிப்பு
வேலூர்: மதுபானம் வாங்கும் சினிமா காட்சியில் நடித்த நடிகை நயன்தாராவின் உருவ பொம்மையை இந்து மக்கள் கட்சியினர் எரித்து வேலூரில் போராட்டம் நடத்தினர்.
நடிகர் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக நயன்தாரா நடிக்கும் படம், 'நானும் ரவுடிதான்'. இந்த படத்தின் ஒரு காட்சியில் பட ஹீரோயின் டாஸ்மாக் கடைக்கு சென்று மதுபாட்டில் வாங்க வேண்டும். அதன்படி இந்த காட்சி ஒரு மாதத்துக்கு முன்பு புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் பாட்டில் வாங்குவது போன்ற காட்சியை டைரக்டர் படமாக்கினார். அப்போது டாஸ்மாக் கடை முன்பு ஏராளமானவர்கள் திரண்டனர்.
அதல் சிலர், அக்காட்சியை செல்போனில் படம் பிடித்துள்ளனர். அதை இணையதளத்தில் சிலர் வெளியிட்டனர். இதைப்பார்த்த சினிமா ரசிகர்கள், நடிகை நயன்தாரா உண்மையிலேயே டாஸ்மாக்கில் மது வாங்குவதாக நினைத்துக் கொண்டனர். இதுகுறித்து நயன்தாரா விளக்கம் அளித்தார். பட ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட காட்சி அது. தயவு செய்து அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.
ஆனால் இப்படியொரு காட்சியை படமாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நயன்தாரா அதில் நடித்ததை கண்டித்தும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. வேலூரில் இந்து மக்கள் கட்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர் தலைமையில் பலர் சேர்ந்து போராட்டம் நடத்திவிட்டு, நயன்தாராவின் உருவபொம்மையை எரித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.