விருதுநகர் அருகே குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் - பெற்றோர் பீதி
விருதுநகர் அருகே மர்மக்காய்ச்சலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதால் பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.
விருதுநகர்: விருதுநகர் அருகே வேகமாக பரவி வரும் மர்மக் காய்ச்சாலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதே இதற்கு காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள குலசேகரநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மஞ்சம்பட்டி கிராமம். இங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் சிறுவர்கள் விமல்ராஜ் , சீதாலட்சமி , பாக்யா , அழகுராஜா , வசந்தகுமார் ஆகியோர் மர்மக்காய்ச்சல் தாக்கி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் நோய் ஏற்பட்டு குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இப்பகுதியில் சுற்றுப்புற சீர்கேடு நிலவி வருகிறது.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். காய்ச்சல் பாதிப்பு குறித்து தகவல் அறிந்த மருத்துவ அதிகாரி ஜெயக்குமாரி ஹேமலதா மஞ்சம்பட்டி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.