நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு.. அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று இரவு டெல்லிக்கு அவசர பயணம்
நீட் தேர்விற்கு ஓராண்டு விலக்கு விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று இரவு டெல்லிக்குப் புறப்படுகிறார்.
சென்னை: நீட் தேர்வு தொடர்பான இன்று டெல்லிக்கு அவசர பயணம் மேற்கொள்கிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரி வருகிறது. இதனையடுத்து, ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கோரினால் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதனையடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வழிவகை செய்யும் அவசரச் சட்ட மசோதா மற்றும் ஆவணங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று இரவு டெல்லி விரைகிறார். இதனால் நீட் தொடர்பான அவசரச் சட்டம் குறித்து நல்ல முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.