‘நீட்’ தேர்வு.. தொடரும் அநீதி.. கானல் நீராய் போகும் தமிழக மாணவர்களின் மருத்துவப் படிப்பு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக மாணவர்கள் மேலும் பாதிப்படைந்துள்ளனர்.
சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடைக்கு எதிராக சி.பி.எஸ்.இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் நீட் தேர்வு முடிவை வெளியிட இருந்த தடை நீங்கியது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறி தமிழக மாணவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில், முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ.யும், தமிழக அரசும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.பி.எஸ்.இ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் 91 சதவீத மாணவர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நீட் தேர்வு எழுதியதாகவும், 9 சதவீதம் பேர் மட்டுமே பிற மொழிகளில் எழுதியதாகவும் கூறப்பட்டது.
மேல்முறையீடு
8 மொழிகளுக்கான வினாத்தாளை 32 பேர் கொண்ட நிபுணர் குழு தயாரித்ததாகவும், தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்துள்ளதால் பல லட்சம் மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடைக்கு எதிராக சி.பி.எஸ்.இ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தடை நீக்கம்
இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் நீட் தேர்வு முடிவை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த தடை நீக்கி உத்தரவிட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மாணவர்கள் பாதிப்பு
ஏற்கனவே நீட் தேர்வு தேவையில்லை என்று தமிழக அரசு சட்டம் இயற்றிய போதும் அதற்கு அனுமதி வழங்காமல் மத்திய அரசு தமிழக மாணவர்களை பழி வாங்கியது. நீட் தேர்வின் போது ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையாக வேண்டுமென்றே கேள்விகளை கேட்டு தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பை மத்திய அரசு பாழாக்கியது.
மாணவர்கள் அச்சம்
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முடிவு வெளியிட இருந்த தடையை நீக்கி தமிழக மாணவர்களுக்கு மேலும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளால் மருத்துவப் படிப்பை கனவாய் கொண்டுள்ள தமிழக மாணவர்களின் ஆசை மண்ணோடு மண்ணாய் போகும் அபாயம் உருவாகியுள்ளது.