நீட்: பிளஸ் டூவில் 30% பேர் பாஸாகும் பீகாரைவிட தமிழ்நாடு மோசம்னு சொன்னா.. மனசாட்சியே இல்லையா?
நீட் தேர்வு முடிவில் பீகாரை விட தமிழகம் மோசம் என்பது அதிர்ச்சியான ஒன்று.
Recommended Video
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளில் தமிழகம் 35-வது இடம் என்பதை எவராலும் ஜீரணிக்க முடியாது. அதுவும் உலகமே சந்தி சிரிக்கும் அளவுக்கு காப்பியடித்த, 30% பேர் மட்டுமே பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்ற பீகார் மாணவர்கள் 60% பேர் தேர்ச்சியாம்; தமிழக மாணவர்கள் 60% பேர் தோல்வியாம்.. மனசாட்சியே இல்லையா உங்களுக்கு என்றுதான் கேட்க தோன்றுகிறது.
காலம் காலமாக கல்வியில் பின் தங்கியுள்ள மாநிலங்கள் நீட் தேர்வு முடிவுகளில் திடுதிப்பென முன்னிலை பெற்று வருகின்றன. ஆனால் நேர்மையுடனும் அக்கறையுடனும் படித்து 80% 90% தேர்ச்சி பெறுகிற தமிழக மாணவர்கள் அறிவற்றவர்கள் என இந்த நீட் தேர்வு முடிவுகள் செவுளில் அறைகின்றன.
அதுவும் 70% மாணவர்கள் தோல்வி அடைந்த பீகாரை விட மிகவும் பின் தங்கிப் போய்விட்டதாம் தமிழகம். அதைவிட கொடுமை பீகார் மாணவி இந்திய அளவில் முதலிடமாம்.
தமிழகம் மீது தாக்குதல்
இதையெல்லாம் எப்படி நம்புவது எனத் தெரியவில்லை? ஆனால் தமிழகத்தை திட்டமிட்டு ஒதுக்கும் செயல் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.
சிபிஎஸ்இ நீட் திணிப்பு
மாநில பாடத் திட்டப் பாடங்களில் படித்து 1000-க்கும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்து இயல்பாகவே மருத்துவ படிப்புக்கு தமிழக மாணவர்கள் தகுதியானவர்களாக இருக்கின்றனர். ஆனால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிற வஞ்சக எண்ணத்துடன் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்படும் நீட் நுழைவுத் தேர்வை திணித்து உயிர்களை காவு கொள்கிறார்கள்.
ஒப்புதல் ஏன் பெறலை?
இடஒதுக்கீட்டை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வந்த தமிழக அரசால், ஜல்லிக்கட்டைப் பாதுகாக்க தனிச்சட்டம் கொண்டு வந்த அரசால், வருங்கால தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற இயலாமல் இருப்பது கையாலகத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?
இன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்?
தமிழக அரசுதான் இப்படி என்றால் எப்போதும் தமிழகத்திற்கு புறம்பாகவே செயல்படும் மத்திய அரசு, அந்த அவசர சட்டத்தை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது. இப்போது பிரதீபா பலியாகிவிட்டாள்.. கீர்த்திகா உயிருக்குப் போராடுகிறாள்... அன்று அனிதாவை கொலை செய்தார்கள்.. இன்னும் இன்னும் எத்தனை உயிர்கள்தான் இந்த அரசுகளுக்கு வேண்டுமாம்?
தமிழகத்தில் தொடரும் மரண ஓலம்
துப்பாக்கிச் சூடுகளில் மரணங்கள்,,, நீட் தேர்வுகளில் மரணங்கள்.. தமிழகமே மரண ஓலமிட்டுக் கொண்டிருப்பதை ரசிக்கின்றவர்கள் எப்போதுதான் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள முன்வருவார்கள்?