தீவிரவாதிகளை போல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்குள்ளாக்கப்படும் நீட் மாணவர்கள்
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களை தீவிரவாதிகளை போல் மெட்டல் டிடெக்டர் மூலம் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Recommended Video
சென்னை: நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களை தீவிரவாதிகளை சோதனை செய்வது போல் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெற்றோர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் இன்று 2-ஆவது ஆண்டாக தமிழக மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்கின்றனர்.
இங்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மாணவர்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும் சிலர் பதற்றத்துடனேயே காணப்படுகின்றனர்.
தேர்வு மையங்கள்
வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வு மையங்களை தேடி அலைந்து இன்று அதிகாலை முதலே தங்கும் இடம் கூட இல்லாமல் பெற்றோரும், மாணவர்களும் அவதிப்பட்டுள்ளனர்.
கட்டுப்பாடுகள் ஏராளம்
தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கையில் கயிறு கட்டியிருக்கக் கூடாது, மாணவிகள் கம்மல், கொலுசு, கைக்கடிகாரம், தலையில் கிளிப் உள்ளிட்டவை அணியக் கூடாது. தலைமுடியை பின்னலாக போட்டு வந்த மாணவர்களின் பின்னலை கழற்றி தலைவிரி கோலத்துடன் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கைக்குட்டை, டிஸ்யூ பேப்பர்
ஜலதோஷம் ஏற்பட்ட மாணவர்கள் கைக்குட்டை, டிஸ்யூ பேப்பர் கொண்டு செல்ல அனுமதியில்லை. சளியை துடைத்துக் கொள்ள தேவைப்படும் என்று கேட்டபோது போட்டிருக்கும் ஆடையிலேயே துடைத்துக் கொள்ளட்டும் என்று அலட்சியமாக அதிகாரிகள் பதில் அளிப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
காதுகளில் டார்ச்
மாணவர்களை தீவிரவாதிகளை சோதனையிடுவது போல் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்படுகின்றனர். மேலும் காதுகளில் மைக்ரோ போன், ப்ளூடூத் உள்ளிட்ட கருவிகள் இருக்கின்றனவை என பார்க்க அவர்களது காதுகளில் டார்ச் லைட் அடித்து பார்க்கும் அவலங்களும் நடந்தேறி வருகின்றன.
விதிகளை படிக்காத அதிகாரிகள்
சேலம் அய்யோதியா பட்டனம் பகுதியில் உள்ள வித்யா மந்திர் பள்ளியில் "நீட்" தேர்வு தொடங்கியுள்ளது. ஆனால் மாணவர்களை தீவிரவாதிகளை சோதிப்பது போல் மெட்டல் டிடெக்டர் மூலமும், உடலை இரு கைகளால் தடவியும் சோதனை செய்கின்றனர். இந்த பள்ளியில் செருப்பு கூட அணியக் கூடாதாம். விதிகளில் செருப்பு அணியலாம், ஷூ, ஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது என்பதுதான் விதி. ஆனால் அதிகாரிகள் விதிகளை முழுமையாக படிக்காமல் இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.