நெல்லை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுற்றுச் சுவர் கட்ட முஸ்லீம்கள் எதிர்ப்பு
நெல்லை: நெல்லை மருத்துவ கல்லூரி வாளகத்தில் சுற்று சுவர் கட்ட முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையம் அருகே நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்லும் சாலையின் மேல்புறம் சுமார் 92 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் மருத்துவ கல்லூரி சார்பில் சுற்று சுவர் கட்டும் பணிக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் வானம் தோண்டும் பணி நடந்தது. ஆனால் அந்த இடம் முஸ்லிம் நிலையத்திற்கு 6 ஏக்கர் நிலம் தானமாக வழங்கிய நெல்லையை சேர்ந்த காதர் மீரா சாகிபுக்கு சொந்தமானது என அவரது மகன் சலாகுதீன் தெரிவித்தார்.
மேலும் அதற்கான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றபோது நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெறப்பட்டது. எனவே இங்கு கம்பவுண்ட் சுவர் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அங்கு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். பதட்டம் உருவானதால் உதவி கமிஷனர் மாதவன் நாயர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சலாகுதீன் மற்றும் அவரது வக்கீல் ஆகியோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அதில் முஸ்லிம் அனாதை நிலையத்தல் உள்ள 92 சென்ட் இடம் காதர் மீரா சாகிபு வகையறாக்களுக்கு சொந்தமானது. மொத்தமுளள 7.55 ஏக்கர் நிலத்தில் 6 ஏக்கர் நிலம் பாளை முஸ்லிம் அனாதை நிலையத்துக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டது. அதன் மேல்புறம் உள்ள இடத்தில் மருத்துவ கல்லூரிக்கு செல்லும் பாதையில் இடம் கேட்டதின் பேரில் மீரா சாகிபு வகையறாக்கள் இடம் இலவசமாக வழங்கினர்.
மேலும் 92 சென்ட் நிலமானது அனுபவத்தில் இருந்து வருகிறது. அதற்கான ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் இருககிறது. மருத்துவ கல்லூரி நிர்வாகம் அத்துமீறி நுழைந்து சுற்று சுவர் கட்ட முயல்கின்றனர் என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதியில் பதட்டம் நிலவியது.