விஞ்ஞானியாக விரும்பும் நெல்லை மாவட்ட பிளஸ் 2 “டாப்பர்”
நெல்லை: பிளஸ்டூ தேர்வில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். இவர் ஆராய்ச்சி விஞ்ஞானியாக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாவட்டத்தின் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த முறை மாநில ரேங்கை தவற விட்டனர்.
ஆயினும் மாவட்ட அளவில் பாளை மகாராஜா நகர் ஜெயந்திரா பள்ளி மாணவி பாலபிரியா 1185 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.
பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள் வரு்மாறு, தமிழ் - 191, ஆங்கிலம் - 195, கணிதம் - 199, இயற்பியல் - 200, வேதியியல் - 200, உயிரியல் - 200 ஆகும்.
இவரது தாய் நெல்லை சிண்டிகேட் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். மாவட்ட அளவில் சாதனை படைத்தது பற்றி பாலபிரியா கூறுகையில், "எஸ்எஸ்எல்சி தேர்வில் 489 மதிப்பெண்கள் பெற்றேன்.
தற்போது பிளஸ்டூ தேர்வில் 1185 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இந்த வெற்றிக்கு எனது தாய், பள்ளி முதல்வர், தாளாளர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த ஊக்கம் அளித்தனர். ஜேஇஇ-ஐஐடி மெயின் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். இதில் அட்வான்ஸ் தேர்வு எழுதி ஐஐடியில் ஆராய்ச்சி கல்வி பயில ஆவல் உள்ளது.
இல்லாவிட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள ஐஐஎஸ்இஆர் (ஆராய்ச்சி படிப்பு) இல் பயின்று அத்துறையில் ஆராய்ச்சி அறிஞராகவோ, பேராசிரியராகவோ ஆக விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி பாலபிரியாவுக்கு பள்ளி தாளாளர் ஜெயந்திரன் மணி, முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டி தெரிவித்தனர்.