நெல்லித்தோப்பில் ஜெயித்து புதுவை முதல்வர் பதவியை தக்கவைத்தார் நாராயணசாமி
புதுச்சேரியில் நெல்லித் தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்வர் பதவியை தக்கவைத்துள்ளார் நாராயணசாமி.
புதுச்சேரி: புதுச்சேரியில் நவம்பர் 19ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. மூன்று சுற்றுக்கள் மட்டுமே வாக்குகள் எண்ணப்பட்டன. முதல்வர் நாராயணசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை விட 11,143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுவை முதல்வர் நாராயணசாமி கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடாததையடுத்து அவர் தனது பதவியை தக்கவைக்க 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 19ந்தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.
திமுக ஆதரவுடன் முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினார். அதிமுக சார்பாக அவரை எதிர்த்து ஓம் சக்தி சேகர் களம் இறங்கினார். ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக என். ஆர். காங்கிரஸ் கட்சி ஆதரவாக வாக்கு சேகரித்தது. முன்னாள் முதல்வர் ரங்கசாமி தீவிரமாக வாக்கு சேகரித்தார். பலத்த போட்டி நிலவியது.
கடந்த 19ந்தேதி பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையமான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் 8 மணியில் இருந்தே வெளியாகத் தொடங்கின மூன்று சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை முடிவில் முதல்வர் நாராயணசாமி 18, 707 வாக்குகளும், அதிமுகவின் ஓம்சக்தி சேகர் 7564 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.












Click it and Unblock the Notifications