வேண்டும் காவிரி, வேண்டாம் ஐபிஎல்... ட்ரெண்ட் ஆகும் பாய்காட் ஐபிஎல் ஹேஷ்டேக்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை இங்கு நடத்தக் கூடாது என்ற குரல் வலுத்து வருகிறது.
Recommended Video
சென்னை : தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். வேல்முருகனின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். ஐபிஎல்லை புறக்கணிப்போம் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். வாழ்வாதார பிரச்னைக்காக மக்கள் போராடி வரும் நிலையில் ஐபிஎல் போட்டிகள் மக்களின் கவனத்தை திசை திருப்பும் என்பதால் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று வேல்முருகன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் கருத்துகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
|
மாற வேண்டியது மக்களே
உலக நாடுகள் அனைத்திற்கும் தெரிகிறது தமிழ்நாடு அழிக்கப்பட்டு வருகிறது என்று. ஆனால் தமிழர்களாகிய நாம் ஐபிஎல் போட்டி பார்க்கும் சந்தோசத்தில் இருக்கின்றோம். மாறவேண்டியது ஆட்சியாளர்கள் இல்லை மக்களாகிய நாம் இல்லை என்றால் இதே நிலை தான் என்று ஆதங்கத்துடன் கருத்து பதிவிட்டுள்ளார் இவர்.
|
தண்ணீர் தான் தேவை
நமக்கு ஐபிஎல் தேவையில்லை. வாழ்வதற்கு தண்ணீர் தான் தேவை என்று ட்வீட்டியுள்ளார் இந்த நெட்டிசன்.
|
போராட்டத்தை கைவிடாது இருங்கள்
நம் தமிழ் மக்கள் ஒரு பிரச்சனையை பற்றி ஒரு போராட்டம் பண்ணுவாங்க, ஆனா அதுக்குள்ள அதை மறக்கடிக்க இன்னொரு பிரச்சனை ரெடியா வந்து நிக்கும். இதுதான் நம் சாபக்கேடு. இந்த ஐபிஎல் மேட்ச் ஆரம்பிச்சாலும் நம் போராட்டங்களை கைவிடாது இதிலேயே முனைப்பாய் நம் எதிர்ப்பை காண்பிப்போம் மக்களே என்று கேட்டுக்கொண்டுள்ளார் இவர்.
|
வேண்டாம் ஐபிஎல்
வேண்டும் காவிரி, வேண்டாம் ஐபிஎல் என்று ஐபிஎல்லை புறக்கணிப்போம் ஹேஷ்டேக்குடன் இந்த நெட்டிசன் கருத்து பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் தற்போதைய தேவை காவிரி மட்டுமே என்பதை மக்கள் இப்போது உணர வேண்டும் என்கிற ரீதியில் இந்த கருத்தை போட்டுள்ளார்.
|
மைதானம் காலியாக இருந்தால் தெரியும்
நான் சொல்வது சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள். ஏப்., 10-ம் தேதி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல்., போட்டியில், சென்னை அணியின் முதல் போட்டி நடக்கிறது. அன்றைய தினம் யாரும் போட்டியை நேரடியாக சென்று பார்க்காமல் இருந்தால் மைதானம் காலியாக தெரிந்தால் தமிழகத்தின் பிரச்னை என்ன என அனைவருக்கும் தெரியும் என்று இவர் ட்வீட்டியுள்ளார்.
|
மத்திய அரசு உணரும்
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டியை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இங்கு என்ன பிரச்னை என்பதை வட இந்தியர்கள் உள்பட உலகம் முழுவதும் தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். வாழ்வாதார பிரச்னையில் அரசியல் செய்யக்கூடாது என்பதையும் மத்திய அரசு உணரும் என்றும் இந்த நெட்டிசன் தெரிவித்துள்ளார்.