போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி ஊரில் ஒரு ரேசன் கார்டுக்கு ரூ. 60000 விநியோகம்
வருமான வரித்துறையினர் வலையில் சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் ஊரில் ஒரு குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேலூர்: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்புக்குப் பின்னர், கறுப்பு பணம், கள்ள நோட்டு பதுக்குபவர்களை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
அந்த சோதனையின் போது 132 கோடி ரூபாய்,177 கிலோ தங்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. புதிய ரூபாய் நோட்டுக்களாக 35 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களாக சேகர் ரெட்டி எப்படி மாற்றினார் என்பது பற்றி 50 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சேகர் ரெட்டியின் சொந்த ஊரான காட்பாடியை அடுத்த தொண்டான்துளசியில், கிராம மக்களுக்கு ஒரு ரேசன்கார்டுக்கு தலா.ரூ.60 ஆயிரம் ரூபாய், 1200 பேருக்கு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது கொடுக்கப்பட்டுள்ள பணத்தை வட்டியில்லாமல் 4 தவணைகளாக வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.