"மரணம் அழகானது- நிலையானது- இறுதியானது- நிரந்தரமானது" ஜெ. மரணத்தை ரசிக்கிறாரா நாஞ்சில் சம்பத்?
சென்னை: நாள்தோறும் நாஞ்சில் சம்பத்தின் ஃபேஸ்புக் பதிவுகள் சர்ச்சைகளின் சங்கமமாக அமைந்துவிடுகின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பான பதிவில் மரணம் அழகானது- இறுதியானது- நிலையானது என ரசித்துப் பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இலக்கிய புலமையுடன் பேசுவதாக கருதி கொண்டு நாஞ்சில் சம்பத் வெளிப்படுத்தும் கருத்துகள் படு சர்ச்சையாக மாறிவிடுகின்றன. ஓபிஎஸ் அணியில் இருக்கும் பாத்திமா பாபு மற்றும் நடிகை லதா ஆகியோரை பத்தினி தெய்வங்கள் என வசைபாடினார். இது பெரும் சர்ச்சையானது.
அறிக்கைகளில் விடை
இந்த நிலையில் இன்று நாஞ்சில் சம்பத் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் அவர்கள் அம்மாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி நேற்று ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு இருக்கிறார், அந்த அறிக்கையில் பொதுமக்கள் மத்தியில் இருந்த சந்தேகங்களுக்கு உரிய விடை கிடைத்திருக்கிறது.
முற்றுப்புள்ளி
இனியும் அம்மாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று அரசியல் நடத்துபவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதில் ஏதும் சர்ச்சை இல்லைதான்.
மரணம் அழகானது
ஆனால் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான இந்த பதிவிலேயே " மரணம் அழகானது, மரணம் நிலையானது, மரணம் இறுதியானது, அது மட்டுமே நிரந்தரமானது; மரணத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது ஈனத்தனமானது.
ஆன்மா மன்னிக்காது
தேசிய அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த நிலையில் அதில் அரசியல் செய்வது அநாகரீகமானது. அரசியல் செய்ய ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது அதை விட்டு அம்மாவின் மரணத்திற்கு பின்னால் அரசியல் செய்பவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என குறிப்பிட்டிருகிறார். ஜெயலலிதாவின் மரணம் அழகானது- இறுதியானது- நிலையானது என ரசிக்கிறாரா நாஞ்சில் சம்பத் என்ற கேள்வியைத்தான் இந்த ஃபேஸ்புக் பதிவு எழுப்புகிறது.