கன்னியாகுமரி: 8 கிராமங்களின் 254 மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்பவில்லை- நிர்மலா சீதாராமனிடம் மனு
ஓகி புயலில் சிக்கிய கன்னியாகுமரி மீனவர்கள் கரை திரும்பவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அவர்களது உறவினர்கள் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி: ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியில் இருந்து கடலுக்கு சென்ற 8 கிராமங்களின் 254 மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் சேதங்கள் தொடர்பாக தமிழகம், கேரளாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்களையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.
மேலும் தூத்தூர் மறை வட்ட மையத்தில் மீனவர் பிரதிநிதிகளுடனும் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
The Union Minister for Defence, Smt. Nirmala Sitharaman visiting those affected by Ockhi cyclone in Kanyakumari and assuring full central assistance in rescue and relief operations.(03.12.2017) pic.twitter.com/d6v0g4TJzg
— PIB in Tamil Nadu (@pibchennai) December 3, 2017
அப்போது மீனவர் பிரதிநிதிகள் சார்பில் கரை திரும்பாத மீனவர்களின் படகுகள் எத்தனை, கடைசியாக ஜிபிஎஸ் கருவி மூலம் எந்த இடத்தில் தொடர்பு கிடைத்தது? என்பது உள்ளிட்ட முழு விவரங்களுடன் ஒரு மனுவும் நிர்மலா சீதாராமனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் இடம்பெற்றுள்ளதாவது:
வல்லவிளை - 102
தூத்தூர் - 46
இரவிபுத்தன் துறை - 42
சின்னத்துறை - 38
நீரோடி - 10
பூத்தூறை - 10
மார்த்தாண்டம் துறை - 5
இரயுமன் துறை -1
மொத்தம் 8 கிராமங்களைச் சேர்ந்த 254 படகுகளில் சென்ற மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், போர்க்கப்பல்கள் மூலம் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது; மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார்.