ஏடிஎம் திறந்தும் பயனில்லை.. பொதுமக்கள் திண்டாட்டம்
திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஏடிஎம் மையங்கள் திறந்தும் பயனில்லை என பொதுமககள் குமுறி வருகின்றனர்.
பழைய ரூ.500, ரூ.1000 செல்லாது என மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. அந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கியில் டெபாசிட் செய்யலாம். அந்த நோட்டுக்களுக்கு மாற்றாக புதிய ரூ.500, ரூ.2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை ஏதாவது முக்கியமாக வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது நாளாகவும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் கையில் உள்ள பணத்தை மாற்ற வங்கியில் நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்தும், மாற்றியும் சென்றனர்.
இந்நிலையில் மூடப்பட்ட ஏடிஎம்கள் திறக்கப்பட்ட போதிலும் அதில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வரவில்லை. 100 ரூபாய் நோட்டுகளே வந்தது. 5 ஆயிரத்திற்கும் மேல் தேவைப்படுபவர்கள் வங்கிக்கு நேரிடையாக சென்று சிறப்பு கவுண்டர்களில் பணம் எடுத்து வருகின்றனர்.
நெல்லை ஸ்ரீபுரம் தலைமை ஸ்டேட் வங்கியில் காலை முதலே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று அங்குள்ள கவுண்டர்களில் பணம் பெற்றனர். அங்கிருந்த தனியாங்கி இயந்திரம் மூலம் தங்களிடம் உள்ள பணத்தை டெபாசிட் செய்தனர். நெல்லை, பாளையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மாலை வரை ஏடிஎம்மில் பணம் வரவில்லை. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஓரு சில தனியார் வங்கி ஏடிஎம்மில் மையத்தில் மட்டும் பொதுமக்கள் பணம் எடுத்து சென்றனர்.