ஏடிஎம் எல்லாம் அவுட் ஆஃப் சர்வீஸ்... பணத்தை தேடி நான்கு நாட்களாக அலையும் மக்கள்
செல்லாத நோட்டுக்களை மாற்றவும், ஏடிஎம்களில் பணத்தை எடுக்கவும் மக்கள் இன்றும் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.
சென்னை: எங்கே தேடுவேன்... பணத்தை எங்கே தேடுவேன் என்று என்.எஸ். கிருஷ்ணன் பாடியது போல மக்கள் இப்போது செலவுக்கு பணமில்லாமல் புலம்பத் தொடங்கி விட்டனர்.
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார் மோடி. நவம்பர் 9ம் தேதியன்றி வங்கிகள் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் அறிவித்தார் மோடி.
வங்கிகள் நவம்பர் 10ம் தேதி வங்கிகள் திறக்கப்பட்ட உடன் கூட்டம் அலைமோதியது. வங்கி ஊழியர்களின் பாடு படு திண்டாட்டமாகிப் போனது. நவம்பர் 11 நேற்று முதல் ஏடிஎம் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் நிரப்பப்படாமல் மூடப்பட்டிருந்தன.
நவம்பர் 11ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.2 ஆயிரம், ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று அஞ்சிய மக்கள் இரவோடு இரவாக ஏடிஎம்களில் குவிந்தனர். நவம்பர் 10ம் தேதி வங்கிகளுக்கு படையெடுத்தனர். அங்கேயும் நீண்ட வரிசை காத்திருந்தது.
சில்லறை இல்லாமல் தவித்த ஏராளமான பொதுமக்கள் நேற்று ஏடிஎம் மையங்களை நோக்கி அதிகாலையிலேயே படையெடுத்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் நேற்று இயங்கவில்லை.
சென்னை முழுவதும் பரபரப்பு
சென்னையில் கடற்கரை சாலையில் இந்தியன் வங்கி ஏடிஎம் செயல்பட்டது. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் எஸ்.பி.ஐ வங்கி ஏடிஎம் செயல்பட்டது. அங்கெல்லாம் நீண்ட வரிசை காத்திருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணம் எடுத்துச் சென்றனர். மதியத்திற்கு மேல் பல ஏ.டி.எம்கள் பணமின்றி மூடப்பட்டன.
சென்னையில் வேளச்சேரி, ஆதம்பாக்கம், கிண்டி, சூளைமேடு, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், பாரிமுனை, எழும்பூர் போன்ற பிரதான பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்த. திறந்திருந்த சில ஏடிஎம் மையங்களிலும் அவுட் ஆப் சர்வீஸ், பணம் இல்லை என்று அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.
பணம் கிடைக்கலையே
நேற்றைய தினம் ஏடிஎம்களில் பணம் கிடைக்காதவர்கள் இன்று காலை 10 மணிக்கு வங்கிகள் திறந்த பின்னர், நீண்ட வரிசைகளில் நின்று பணத்தைப் பெற்றனர்.
கிராமப் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் பொது மக்கள் பணம் எடுக்கமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர்.
வயதானவர்கள் படும் பாடு
பென்சன் பணம், முதியோர் பென்சன், நூறுநாள் வேலைத்திட்டத்தில் வாங்கிய பணம் என தங்கள் கைவசம் வைத்திருந்த சில 1000, 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரிசையில் நின்ற பொதுமக்கள், வயதானவர்கள் பட்ட பாடுதான் படு துயராமாக இருந்தது. எல்லாம் நாட்டின் நன்மைக்காகத்தான் என்றால் ஏழைகள், வயதானவர்களுக்கு அரசு என்ன சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது என்பதுதான் கேள்வியாக உள்ளது.