ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமரா இல்லை... அப்பல்லோ பிரதாப் ரெட்டி
அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா இல்லை என்று அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
டெல்லி: அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா இல்லை என்று அப்பல்லோ நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டி மறுப்பு தெரிவித்தார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்.22-ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியதால் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்துள்ளது. டெல்லியில் அப்பல்லோ மருத்துவமனை தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அந்த மருத்துவமனையின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சிசிடிவி கேமரா இல்லை
ஜெயலலிதா மரணம் குறித்து டெல்லியில் அப்பல்லோ நிர்வாக இயக்குநர்பிரதாப் ரெட்டி கூறுகையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமரா இல்லை. மருத்துவமனை பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளே எங்களிடம் உள்ளன.

தமிழக அரசிடம் ஆதாரங்கள்
ஜெயலலிதா மரணம் குறித்து முதல் கட்ட விசாரணையின் போதே அவர் சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான ஆதாரங்களை தமிழக அரசிடம் அளித்துவிட்டோம். மேலும் விசாரணை ஆணைத்திடம் தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிப்போம். மருத்துவமனையில் ஜெயலலிதாவிடம் இடைதேர்தலின்போது வேட்பாளரை அங்கீகரிப்பதற்காக கைரேகை பெறப்பட்டது.

விசாரணை கமிஷனிடம் கூறுவோம்
அந்த படிவத்தில் உள்ளது ஜெயலலிதாவின் கைரேகைதான். அந்த சமயம் அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்பது குறித்து விசாரணை கமிஷனிடம் தெரிவிப்போம். அவர் என்ன சாப்பிட்டார், எந்த மாத்திரைகளை உட்கொண்டார், அவருடன் வார்ட்டில் யார் யார் இருந்தனர், அவரை யார் யார் சந்தித்தனர் என்பது தொடர்பான கேள்விகளுக்கான பதில் எங்களிடம் பத்திரமாக கோப்புகளில் உள்ளது.

மறைப்பதற்கு ஒன்றும் இல்லை
ஜெயலலிதா மரணம் குறித்து தற்போது சர்ச்சை நிலவி வரும் நிலையில் நாங்கள் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. அனைத்தையும் விசாரணை ஆணையத்திடம் வழங்குவோம்.ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications