ஜெ. சொன்னது மாதிரி சங்கிலி திருடர்கள் ஓடவில்லை... தொழிற்சாலைகள்தான் ஓடுகின்றன: பாஜக
வேலூர்: தமிழகத்தில் இருந்த சங்கிலிப் பறிப்புத் திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடவில்லை. இங்குள்ள தொழிற்சாலைகள்தான் ஆந்திராவிற்கு இடம் மாறி வருகின்றன என பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப்பார்வையாளருமான முரளிதர ராவ் கூறியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பேசிய ஜெயலலிதா, நான் முதல்வராக பதவியேற்பதற்கு முந்தைய தினமே தமிழகத்தில் கொள்ளை, திருட்டுக்கள் வெகுவாக குறைந்து விட்டது. சங்கிலி பறிப்புத் திருடர்கள் எல்லாம் ஆந்திராவிற்கு ஓடிவிட்டனர் என்று கூறினார்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, செயின் பறிப்புச் சம்பவங்கள் தினசரியும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனை எதிர்கட்சிகளும் சுட்டிக்காட்டி வருகின்றன.
பாஜக மேலிட பார்வையாளர் முரளிதரராவும், தமிழகத்தில் நகை பறிப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். வேலூர் வேட்பாளர் இளங்கோவனை அறிமுகப்படுத்தி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தான் மாறி, மாறி சுழற்சி முறையில் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அவர்களால் தமிழக பிரச்னைகள் எதுவும் தீரவில்லை என்று கூறினார்.
இரண்டு கட்சிகளும் 50 ஆண்டுகளாக கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இதனால் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர். மணல் மாஃபியா, சாராய மாஃபியா போன்ற மாஃபியாக்கள் தான் மறைமுகமாக அதிகாரம் செலுத்துகிறார்கள்.
வீட்டிற்கு வீடு குடிக்க தண்ணீர் இல்லை. தமிழகத்தில் குடிநீர் இல்லை, சாராயம் தெருவுக்கு தெரு இருக்கிறது. அதேபோல், மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு போன்ற எதுவும் இல்லை. ஆனால் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சொல்லிக்கொள்கிறார்கள். இரண்டுமே குற்றவாளிகள் என்றும் கூறினார்.
தமிழகத்திற்கு பா.ஜ.கதான் மாற்று. மத்தியபிரதேசம், குஜராத், சத்தீஸ்கரில் உள்ளது போல் ஊழலற்ற அரசமைப்போம். தலைவர்கள் ஒரு நாள் அதிகாரத்தில் இருப்பதும் மறுநாள் சிறையில் இருப்பதும் தமிழ்நாட்டில் இப்போது பிரபலம்.
செயின் திருடர்கள் ஆந்திராவிற்கு ஓடிவிட்டதாக ஜெயலலிதா ஆரம்பத்தில் கூறினார். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் பல ஆந்திராவுக்கு சென்று கொண்டிருக்கின்றன.
வேலூர், திண்டுக்கல், ராமநாதபுரத்தில் எல்லாம் முஸ்லீம் ஜிகாத் தீவிரவாதம் மத்திய, மாநில அரசுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. வேலூரில் பா.ஜ.க.வை சேர்ந்த அரவிந்த் ரெட்டி தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இரண்டு கட்சிகளும் ஓட்டு அரசியலுக்காக அவற்றை கண்டிப்பதில்லை. பா.ஜ.க இவற்றை எல்லாம் தடுத்து வெளிப்படையான நல்லாட்சியை வழங்கும் என்றும் முரளிதரராவ் கூறினார்.