திமுக- தேமுதிக- காங்கிரஸ் கூட்டணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை: கருணாநிதி
சென்னை: திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படக் கூடும் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில் கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
திருச்சி திமுக மாநில மாநாட்டுக்கு இன்று கருணாநிதி புறப்பட்டுச் சென்றார். அவர் திருச்சிக்கு புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. திமுக கூட்டணி குறித்து பத்திரிகைகள் பொய் செய்திகள் வெளியிடுகின்றன.
தேமுதிக, காங்கிரஸ் உடன் கூட்ட ணிக்கான அறிகுறியோ, சூழ்நிலையோ இல்லை. கூட்டணியை பொறுத்தவரை எடுத்தமுடிவை ஒற்றுமையுடன் செயல்படுத்துவோம்.
திருச்சியில் நடைபெறும் திமுக மாநாடு மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இவ்வாறு கருணாநிதி கூறினார்.
காங்கிரஸுடன் கூட்டணி இல்லை?
திமுக- காங்கிரஸ் இடையே மீண்டும் கூட்டணி ஏற்படப் போவதாகவும் இதற்கான ஏ.கே.அந்தோணி அல்லது வீரப்ப மொய்லி சென்னை வரப் போவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. அத்துடன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கருணாநிதி மகளும் எம்.பியுமான கனிமொழியும் சந்தித்தார்.
இதனால் காங்கிரஸ்- திமுக கூட்டணி உருவாகும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தொடக்கம் முதலே காங்கிரஸுடனான கூட்டணியை மு.க. ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்.
அழகிரி, கனிமொழி, தயாநிதி தரப்புதான் காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்டணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்று கருணாநிதி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.