மறைமுகமாக அதிமுகவை தாக்கிய ரஜினிகாந்த்.. மத்தியில் ஆளும் பாஜக பற்றி கப்சிப்!
Recommended Video
சென்னை: அரசியலில் களமிறங்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அவர் மத்திய பாஜக அரசை குற்றம்சாட்டி பேசவில்லை என்பதை பல எதிர்க்கட்சி தலைவர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
சென்னையில் இன்று, ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது தான் எதற்காக இப்போது அரசியலில் குதிக்கிறேன் என்ற காரணத்தையும் அவர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் பேச்சின்போது கூறியதாவது:
ஜனநாயகம் சீர்கெட்டு போனது
கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வைத்துவிட்டது. எல்லா மாநில மக்களும் நம்மை பார்த்து சிரித்துக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் நான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஜனநாயக ரீதியாக உதவ நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை துரத்தும் என்றார் அவர்.
மத்திய அரசு பற்றி சொல்லவில்லை
அரசியலுக்கு அவர் வருவதற்கான காரணமாக, கடந்த ஓராண்டாக தமிழகத்தில் நடந்த அரசியல் சம்பவங்களைதான் காரணமாக கூறியுள்ளார் ரஜினிகாந்த். ஆனால், தனது முதல் பேச்சில், மத்திய அரசை பற்றி எதுவும் அவர் சொல்லவில்லை. மாநில அரசியல் சம்பவங்கள் என அவர் குறிப்பிட்டாரே தவிர, எந்த கட்சியால் நடந்த சம்பவங்கள் என்று நேரடியாகவும் அவர் சொல்லவில்லை. இருப்பினும் கடந்த ஓராண்டு அரசியல் களேபரங்கள் முழுக்க அதிமுகவில்தான் நடந்தன என்பதால் இதை மறைமுக தாக்குதல் என பொருள் கொள்ளலாம்.
நேரடியாக அதிமுகவையும் தாக்கவில்லை
இதையே கூட, அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு வசதியாகத்தான் மாற்றி பேசினார். ரஜினி திமுகவை கூட குறை சொல்லியிருக்கலாம். அவர்தான் அதிமுக என கூறவேயில்லையே என நைசாக நழுவிவிட்டார். எனவே ரஜினிகாந்தின் பேச்சு நேரடியாக அதிமுகவை தாக்கவில்லை, மறைமுகமாக கூட, பாஜக தலைமையிலான மத்திய அரசை தாக்கவில்லை.
பாஜக ஆதரவு என விமர்சனம்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பெரிய தலைவர்கள் பலரும், ரஜினி பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக நேரடியாக கூறவில்லை என்றபோதிலும், அக்கட்சிகளை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள், ரஜினி பாஜக ஆதரவாளர் என குற்றம்சாட்டுகின்றனர். பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்தபோதிலும், ரஜினி அதுபற்றி பேசவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.