தினகரனுக்கு மறுபடியும் "தொப்பி"யைத் தராதீங்க.. தமிழிசை ஏன் இப்படிச் சொல்கிறார்?
தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடவுள்ள டிடிவி தினகரன் அணியினருக்கு தொப்பி சின்னம் வழங்கக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அச்சமயம் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டிருந்தால் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியபோது அதை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இதையடுத்து ஓபிஎஸ் அணியின் சார்பில் போட்டியிட்ட மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு சின்னமும், எடப்பாடி அணி சார்பில் போட்டியிட்ட தினகரனுக்கு தொப்பி சின்னமும் வழங்கப்பட்டது. இந்த இரு சின்னங்களையும் மக்களுக்கு பரீட்சயமாக்கவும் பிரபலப்படுத்தவும் பாடாதபாடுப்பட்டனர்.
தேர்தல் ரத்து
ஆர்.கே.நகருக்குள்பட்ட இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது. பறக்கும் படையினரின் கண்காணிப்பு இருந்த போதிலும் அருகில் உள்ள மளிகைக் கடைகளில் டோக்கன் கொடுத்து பொருள்கள் வழங்கப்பட்டன. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். ரூ.89 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு
இதனிடையே அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜக ஆலோசனைக் கூட்டம் கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழிசையின் பலே லாஜிக்
கூட்டம் முடிந்த பின்னர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது முதல் கூட்டம் தான் நடைபெற்று முடிந்து இருக்கிறது. இதன் முடிவை நாங்கள் மத்திய தலைமைக்கு அனுப்பி இருக்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலை எப்படி அணுகுவது?, எதிர்கொள்வது? என்ற முடிவுக்கு நாங்கள் இன்னும் வரவில்லை. அப்படி இருக்கும்போது யார் வேட்பாளர் என்பதை இப்போது சொல்லமுடியாது.
பணப்புழக்கம்
ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் அவருக்கு கடந்தமுறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் வழங்கக்கூடாது. ஏனென்றால் அந்த தொப்பி சின்னத்தை வைத்துதான் அங்கு ஊழலே ஆரம்பித்தது. மிக அதிகப்படியான பணம் அந்த தொப்பியை பிரபலப்படுத்துவதற்காக தான் நடந்தது. மீண்டும் அவருக்கு தொப்பி சின்னத்தை கொடுக்கும்போது, பழைய முறைகேடுகளின் தொடர்பாகவே தான் இருக்கும். இதை தேர்தல் ஆணையம் சிந்திக்க வேண்டும். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகத்தை நான் வெளிப்படுத்துகிறேன் என்றார் அவர்.