ஏடிஎம்களில் பணம் இல்லை...மீண்டும் நீண்ட கியூ வரிசை.. அடுத்து என்ன குண்டு விழுமோ? பீதியில் மக்கள்
பெரும்பாலான ஏடிஎம்களில் கடந்த மூன்று தினங்களாக பணம் இல்லை என மக்கள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் பணத்துக்காக அலையும் நிலை ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை: பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் கடந்த ஞாயிறு காலையில் இருந்து பணம் கிடைப்பதில்லை. மேலும் சில ஏடிஎம்கள் பாதி மூடப்பட்ட கதவுகளுடனே இருப்பதால், மீண்டும் பணம் எடுக்க கியூவில் நிற்க வேண்டுமோ என மக்கள் அச்சத்த்தில் உள்ளனர்.
மாதத்தின் முதல் பத்து நாட்களில் மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள் தான் அதிகளவில் ஏடிஎம் மையங்களுக்குச் சென்று பணம் எடுப்பார்கள். ஆனால், கடந்த மூன்று நாட்களாக பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பணம் இல்லை என பணம் எடுக்கச் செல்லும் அனைவரும் சோக முகத்துடன் திரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 8, ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை மோடி அறிவித்தார். அதன்பிறகு, 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும் கையில் உள்ள பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது
இதனையடுத்து மொத்த இந்தியாவும் வங்கி வாசலில் நீண்ட வரிசையில் நின்றது. திடீர் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் வரிசையில் நின்றதாலும், திடீர் அறிவிப்பு கொடுத்த அதிர்ச்சியிலும் 150க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.
ஏடிஎம்களில் இத்தனை ஆயிரங்கள் தான் பணம் எடுக்க இயலும் என ரிசர்வ் வங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டது. இப்படி பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவித்தனர். இந்த நிலையில் அண்மையில்தான், ரிசர்வ் வங்கி பணம் எடுக்க இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்கியது.
ஆனால், கட்டுப்பாடுகள் நீங்கிய சில நாட்களிலேயே வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை என்கிற புலம்பல் எல்லா இடங்களில் கேட்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மீண்டும் ஏதேனும் புதிய அறிவிப்பை வெளியிட்டு, திரும்பவும் பணத்துக்கு தெருத் தெருவாக அலையும் நிலை ஏற்படுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதில், மக்கள் புழங்குவதற்கு ஏற்ப தேவையான பணம் இல்லை என்பதால், புதிய 200 ரூபாய் நோட்டை அச்சடிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இது டிஜிட்டல் பணபரிவர்த்தனைத் திட்டம் தோல்வி என்பதையே சுட்டிக் காட்டுகிறது.