துறை அமைச்சர் மட்டும் உடன் இருந்தால் போதும்.. ஜெயலலிதா அதிரடி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தது முதலே அவரிடம் பல மாற்றங்களைப் பார்க்க முடிகிறது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முந்தைய செயல்பாடுகளை இப்போது காணோம். நிறைய மாறியுள்ளதாகவே தெரிகிறது.
பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட மு.க.ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் கொடுக்கப்பட்ட இடம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையாக சாடி அறிக்கை விட்டபோதும் மிக மிக நிதானமான பதிலையே அவர் கொடுத்தார். மேலும் ஸ்டாலினுக்கு சட்டசபையில் வணக்கம் வைத்தும் அனைவரையும் கவர்ந்தார்.
அதேபோல பதவியேற்பு விழாவின்போது தனக்கு பேனர் வைக்கக் கூடாது என்றும், அமைச்சர்கள் யாரும் காலில் விழக் கூடாது என்றும் கட்டளையிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
ஐவர் அணிக்கு ஆப்பு
இந்த நிலையில் தற்போது ஐவர் அணி என்று கடந்த ஆட்சிக்காலத்தின்போது இருந்த குழுவை இப்போது தூக்கிக் குப்பையில் போட்டு விட்டார்.
ஓ.பி.எஸ். தலைமையில்
கடந்த 2011ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன் ஆகியோர் அடங்கிய ஐவர் அணிதான் ஜெயலலிதாவிடம் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்ந்தது. இவர்களைத் தாண்டித்தான் யாராக இருந்தாலும் போக முடியும்.
ஆலோசனையில்
இந்த ஐந்து அமைச்சர்களும் முதல்வர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் பங்கேற்பார்கள். கட்சி, ஆட்சி முடிவுகளை இவர்கள் மூலமாகத்தான் நிறைவேற்றுவது ஜெயலலிதாவின் வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐவர் அணியைக் காணவில்லை.
சம்பந்தப்பட்டவர் மட்டும்
தற்போது முதல்வர் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களில் அந்தந்த துறை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்த கொள்கின்றனர். ஐவர் அணி என்று யாரும் அழைக்கப்படுவதில்லை. ஏன் மூத்த அமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் கூட வருவதில்லை.
ஒரே அதிகார மையம்
அதிமுகவிலும், ஆட்சியிலும் ஒரே அதிகார மையம், அது ஜெயலலிதா மட்டுமே. தேவையில்லாத அதிகார மையங்களை தான் விரும்பவில்லை என்பதை அவர் சொல்லாமல் சொல்லிக் காட்டுவதாக இது பார்க்கப்படுகிறது. அதேசமயம் தான் முன்பு போல இல்லை என்று வெளிப்படுத்திக் கொள்ளவும் இந்த ஐவர் அணியை ஜெயலலிதா கலைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
மாற்றம் நல்லது.. அதை விட அது மக்களுக்குப் பயன் கொடுப்பதாக இருந்தால் மிக மிக நல்லது!