வைகோவை யாரும் 'சீரியசாக' எடுத்துக்கிறதே இல்லை: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு 'பொளேர்'!
சென்னை: மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோவை நாங்கள் யாரும் பொருட்படுத்துவது இல்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக உரிமை பிரச்சனை ஆகியவற்றில் மத்திய அரசின் நிலையைக் கண்டித்து அண்மையில் மதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதன் பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்ததால் தமிழ்நாட்டு மோடி வந்தால் கருப்புக் கொடி காட்டுவோம் என்று வைகோ அறிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான வெங்கையா நாயுடு கூறியதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் அனுமதித்ததற்காக கருப்புக் கொடி காட்டுவோம் என்று அறிவித்துள்ள வைகோவை நாங்கள் யாரும் பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை.
ஆந்திராவில் தமிழக பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது. பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது ஆந்திர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இணையதளங்கள், சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படும். இந்து மதத்துக்கு மீண்டும் திரும்புவது தவறு எனில் மதமாற்றமும் தவறானதே.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.