வாசனை 'வாஷ் அவுட்' ஆக்க தீவிரமாகும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: ஆள் திரட்ட புது டெக்னிக்
புதுக்கோட்டை: காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தனி கட்சி தொடங்க உள்ள ஜி.கே.வாசன் கோஷ்டியை வலுவிழக்கச் செய்ய தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கட்சி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு தலைக்கு 250 ரூபாய் கொடுத்து அழைத்து வந்த கூத்தும் நடந்துள்ளதாம்.
புதுக்கோட்டையில் கடந்த 15ஆம் தேதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நடந்தது. இதற்கு முன்னோட்டமாக ஒருவாரத்திற்கு முன்பு ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார்கள். அதில் வெறும் இருபது பேர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் வாசன் தரப்பு சாருபாலா தொண்டைமான் தலைமையில் போட்டி கூட்டத்தை புதுக்கோட்டையில் கூட்டியிருக்கிறார். அதில் சுமார் இருநூறு பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
பெரிய கூட்டம் கூடணும்
இந்த தகவல் ப.சிதம்பரத்தின் கவனத்திற்கு போயிருக்கிறது. உடனே என்ன செய்வீர்களோ இன்னும் இரண்டு நாட்களில் ஒரு பெரும் கூட்டத்தை கூட்டியே ஆக வேண்டும் என மாவட்ட தலைவர் புஷ்பராஜிடம் சொல்லியிருக்கிறார்.
தலைக்கு ரூபாய் 250
ஆண்களுக்கு 250ம், பெண்களுக்கு 200ம் கொடுத்து சுமார் ஆயிரம் பேரை கூட்டியிருக்கிறார் கெத்து காட்டியிருக்கிறார் புஷ்பராஜ். ஆனால் கூட்டத்தில் வந்தவர்களில் ஏராளமானோர் அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களாம். கூட்டத்தில் பேசிய முன்னணி தலைவர்கள் மோடியை திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.
காங்கிரஸ் கோட்டையாக்குவோம்
திருநாவுக்கரசர் பேசும்போது, ஒரு காலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து தொகுதிகள் இருந்தது. ஐந்துமே காங்கிரஸ் தொகுதிகளாக இருந்தது. நான் கஷ்டப்பட்டு அ.தி.மு.க கோட்டையாக மாற்றினேன். இப்போது மீண்டும் காங்கிரஸ் கோட்டையாக மாற்றிக்காட்டுவோம் என்றார்.
கூட்டமே நடக்காது
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், "வாசன் என்கிற பெயரை உச்சரிக்காமல் பிரிந்து போனவர்கள் திருச்சியில் கூட்டத்தை கூட்டுகிறார்களாம். அதில் ஐந்து லட்சம் பேரை திரட்டுவார்களாம். அவர்கள் பத்து லட்சம் பேர் என்று கூட சொல்லட்டும் எனக்கு சந்தோஷம் தான் ஆனால் முதலில் அந்த கூட்டம் நடக்கிறதா என்று பார்ப்போம்" என்றார்.
காணாமல் போகும்
ப.சிதம்பரம் பேசுகையில், இந்த நாட்டில் எத்தனையோ கட்சிகள் உதயமாகி இன்று காணாமல் போயிருக்கிறது. அப்படி காணாமல் போகும் கட்சியில் புதிதாக 28ஆம் தேதி உருவாகப்போகும் கட்சியும் ஒன்று" என்றார்.
2016ல் காங்கிரஸ் ஆட்சி
'காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் மக்களிடத்தில் முறையாக எடுத்து சொல்லவில்லை. அதனால் தான் இந்த தோல்வி என்றும் அவர் ஆதங்கப்பட்டார். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அனைவரும் 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வருவோம்' என பலரும் முழக்கமிட்டனர்.
மாநிலம் முழுவதும்
வாசன் கட்சியை வாஸ் அவுட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தொடர்ந்து சிவகங்கை, கோவை என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாசன் கோஷ்டியினரை திட்டி தீர்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.