'துரோகி' எடப்பாடி அரசுக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது.. அமைச்சர்களிடம் சீறிய ஓபிஎஸ்
தமக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஒருபோதும் ஆதரவு கிடையாது என சீறியிருக்கிறார் ஓபிஎஸ்.
சென்னை: தமக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஒருபோதும் ஆதரவு தர முடியாது என தம்மை சந்தித்த அமைச்சர்களிடம் கடுமையாகவே சீறியிருக்கிறார் ஓபிஎஸ்.
திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த தினகரன், எடப்பாடி அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தயவில்தான் முதல்வர் நாற்காலியில் எடப்பாடி அமர்ந்திருக்கிறார்.
தமது உத்தரவுப்படிதான் எடப்பாடி செயல்பட வேண்டும் என்பது தினகரன் எண்ணம். ஆனால் எடப்பாடி தரப்பு கொங்கு கோஷ்டியோ, எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பறிகொடுக்க விரும்பவில்லை. எப்பாடுபட்டாவது நாங்கள் சுதந்திரமாக செயல்படுகிறோம்.

நோ சசிகலா குடும்பம்
மீண்டும் சசிகலா குடும்பத்தின் பிடிக்குள் சிக்கமாட்டோம் என அடம்பிடித்து வருகின்றனர். ஒருவேளை தினகரன் தரப்பு நெருக்கடி கொடுத்தால் நாங்கள் ஓபிஎஸ்-ன் ஆதரவை கேட்கவும் தயங்கமாட்டோம் எனவும் கூறி வருகின்றனர்.

எடப்பாடி ஆலோசனை
இதனிடையே தினகரன் கோஷ்டியின் நெருக்கடி உச்சத்தை அடைந்தது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியிருந்தார்.

ஓபிஎஸ்-க்கு தூது
அப்போது ஓபிஎஸ்-ன் ஆதரவை வெளிப்படையாக கேட்போம்- அமைச்சர்கள் வேலுமணி மற்றும் தங்கமணியை அனுப்பி வைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவல் ஓபிஎஸ்-க்கும் தெரிவிக்கப்பட்டது.

மகிழ்ச்சியில் கொங்கு கோஷ்டி
அவரும் சட்டசபை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் சந்திக்கலாம் என சொல்லியிருக்கிறார். இதனால் கொங்கு கோஷ்டி அமைச்சர்கள் ரொம்பவே குஷியாக இருந்தனர்.

கோட்டையில் சந்திப்பு
சட்டசபை ஓய்வு அறையில் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோருடன் ஓபிஎஸ் அமர்ந்திருந்த போது அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் வந்துள்ளனர். இதையடுத்து தமது அறையில் இருந்த அனைவரையும் வெளியே இருக்க சொல்லிவிட்டு அமைச்சர்களுடன் பேசினார் ஓபிஎஸ்.

சீறிய ஓபிஎஸ்
அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமக்கு எப்படியெல்லாம் துரோகம் செய்திருக்கிறார். நான் பேச வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. எடப்பாடியின் துரோகம் எனக்கு ஆறாத ரணமாக இருக்கிறது. நான் ஒருபோதும் அந்த துரோகிக்கு உதவவே மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லிவிடுங்கள் என காட்டமாக சீறியிருக்கிறார். ஓபிஎஸ்-ன் இந்த சீற்றத்தை எதிர்பார்க்காத அமைச்சர்கள் இருவரும் இருண்ட முகத்துடன் எடப்பாடியிடம் போய் ஒப்புவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications