அப்பு, இனி ரயில் பயணிகளுக்கு கையில் டிக்கெட் வேண்டாம், ”ஆப்” மட்டும் போதும்!
சென்னை: முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் ரயில் பயணிகளுக்காக காகிதமற்ற டிக்கெட் வழங்குவதற்கான "ஆப்" வசதியை ரயில்வே துறை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது முன்பதிவு செய்யாமல் ரயில் பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கான பயணச் சீட்டைப் பெறுவதற்கு டிக்கெட் கவுன்ட்டர் முன் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இதனால் நேர விரயம் அதிகரிக்கிறது. மேலும், அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டியுள்ளதால் நிறைய காகிதமும் வீணடிக்கப்படுகின்றன.
எனவே, இதற்குத் தீர்வாக ரயில்வே துறை ஆப் வசதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதன் மூலம் டிக்கெட்டை பிரின்ட் அவுட் எடுக்கத் தேவையில்லை. டிக்கெட் பரிசோதகரிடம் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்த டிக்கெட்டை காண்பித்தால் போதுமானது.
இந்த ஆப்பை ஆண்டிராய்ட் வசதி உள்ள கைப்பேசிகளில் "கூகுள் ஆப் ஸ்டோர்" மூலமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்தவுடன் இ-வாலெட் உருவாக்குவதற்காக பதிவு எண் அனுப்பப்படும். முன்பதிவு செய்யாத பயணச் சீட்டு பெறுவதற்கு அந்த இ-வாலெட் மூலம் இணையம் மூலமாக பணம் செலுத்தலாம். அல்லது டிக்கெட் கவுன்ட்டரில் செலுத்தலாம்.
தவிர, டிக்கெட் கவுன்ட்டரிலோ அல்லது ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் கடன் அட்டைகளைப் பயன்படுத்தியோ இந்த இ-வாலெட்டை அவ்வப்போது டாப் அப் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும், இந்த "ஆப்" மூலம் சீசன் டிக்கெட்டுகளையும் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த வசதி ஆண்டிராய்ட் கைப்பேசி மூலம் வழங்கப்படுகிறது.
மிக விரைவில் பிளாக்பெர்ரி கைப்பேசி மூலம் பயன்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐஆர்சிடிசி என்று கூகுள் ஸ்டோரில் டைப் செய்தாலே இந்த அப்ளிகேஷன் வரிசைப்படுத்தப்படும். "யூடிஎஸ்" என்ற பெயரில் வருகின்ற அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.