இடஒதுக்கீடு விவகாரம்- ஆர்.எஸ்.எஸ்.க்கு தி.க. ஆதரவு!
சென்னை: அரசியல் ஆதாயத்துக்காக இருந்தாலும் கூட இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கி. வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:
கடந்த 7.9.2014 அன்று டெல்லியில், தாழ்த்தப்பட்டோர் நிலை, உரிமைபற்றிய பா.ஜ.க.வின் விஜய் சங்கர் சாஸ்திரி என்பவர் எழுதியுள்ள மூன்று நூல்கள் இவற்றை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய சமூகநீதி இடஒதுக்கீடு பற்றிய உரை - ஒரு புது திருப்பமாக உள்ளது!
இடஒதுக்கீட்டுக்கு முழு ஆதரவு
"ஒடுக்கப்பட்ட மக்கள் காலங் காலமாக அழுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்; அவர்களுக்கு அவசியம் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும். மற்ற முன்னேறிய சமூகத்தவர்களுக்கு சரி சமான நிலையை அவர்கள் எட்டும் வரையில் இந்த ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டோர், மலை வாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தொடர்ந்து தரப்படல் வேண்டும். அதை அவர்கள் பெற்றே ஆக வேண்டும். இந்த இடஒதுக்கீடு கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுமையாக ஆதரிக்கிறது"
"Sangh" favoured the policy of reservation for the Scheduled Castes, the Scheduled Tribes and Other Backward Classes.Dalits have been oppressed through ages and now society must be prepared to give reservation [in education and jobs] to them. Those who should get must get reservation till they are brought forward for harmonious blending," Mr. Bhagwat said. - The Hindu - 8.9.2014
இதன் தமிழாக்கக் கருத்துக்கள் மேலே நம்மால் தரப்பட்டுள்ளது.
அரசியலுக்காக?
"உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் (மாயாவதி கட்சி) வழமையான வாக்கு வங்கியைக் குறி வைத்தே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்தின் இந்த புதிய அறிவிப்பு அமைத்துள்ளது. அங்கே 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது என்றும் இதே செய்தியில் ஒரு குறிப்பும்கூட காட்டப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் ஆர்.எஸ்.எஸ்.
அரசியல் தேர்தல்களில் வெற்றியைப் பறிக்க எண்ணும் எந்த அரசியல் கட்சியும் வாக்காளர்களிடம் எதைச் சொன்னால் அதிக வாக்குகள் கிடைக்குமோ எந்தக் கருத்துக்கு அவர்களிடம் அதிகம் செல்வாக்கு இருக்குமோ அதை தங்கள் வெற்றிக்குரிய ஆயுதமாக பயன்படுத்த எண்ணுவது சகஜம். இப்போது ஆர்.எஸ்.எஸ். நேரிடை அரசியலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து களத்தில் நிற்கின்றது என்பதும் உண்மை.
ஆர்.எஸ்.எஸ். நிலையை வரவேற்கிறோம்
இந்த நிலையில் திராவிடர் கழகம் இதனை எப்படி வரவேற்கத் தயாராக உள்ளது? (ஆர்.எஸ்.எஸ். தலைவரின் புதிய அறிவிப்பை) என்ற நியாயமான சந்தேகம் பலருக்கு ஏற்படலாம்.
காங்கிரஸில் இருந்து விலகியது..
தந்தை பெரியார் அவர்கள் 1925இல் காங்கிரஸை விட்டு வெளியேறியது - இதே சமூக நீதிப் பிரச்சினை இடஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாகத்தான்.
அரசியல் சாசன எரிப்பு
1950-இல் இந்திய அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளைக்காட்டி, 1928 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து, கல்வி - உத்தியோகங்களில் ஒடுக்கப்பட்டோருக்குக் கிடைத்து வந்த வாய்ப்புகளை சட்ட ரீதியாக செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்து பெருங் கிளர்ச்சி நடத்தி, பண்டித ஜவகர்லால் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் 1951இல் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, இடஒதுக்கீடு செல்லும் என்று ஆக்கியதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அல்லவா?
மண்டல் கமிஷன்
மத்திய அரசில் இடஒதுக்கீடு, பெரும் பகுதியான பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் இல்லை என்பதை எதிர்த்து, தந்தை பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் தொடர்ந்து போராடியதால் மண்டல் கமிஷன் அறிக்கை தந்து அதனைக் கிடப்பிலிருந்து வெளியே கொண்டு வந்து 1990இல் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமரான நிலையில் செயல்படுத்திடும் நிலையை உருவாக்கிட பெரிதும் காரணமாகி, இந்தியா முழுவதும் இதனை பரப்பிட முன்னெடுத்துச் சென்ற இயக்கம் பெரியார் இயக்கமான திராவிடர் கழகமே!
வி.பி.சிங் முழக்கம்
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பெருமையாகவே கூறினார்: "சமூக நீதிக்காக எத்தனை முறையும் பிரதமர் பதவிகளை இழக்கத் தயார்! மண்டல் காற்றை எந்தக் கமண்டல்களாலும் இனி தடுத்து விட முடியாது" என்று முழங்கினார். சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங் அவர்களை Casteist ‘ஜாதி வெறியர்' என்றெல்லாம்கூட வர்ணித்தனர்.
பெரியார் மேளாவுக்காக ஆட்சி கலைப்பு
பெரியார் மேளாவை உ.பி.யில் சமூக நீதி நாயகர் கான்ஷிராம், முதல்வர் மாயாவதி உ.பி.யில் (நம்மை அழைத்து) நடத்தினார்கள் என்பதற்காக சில மாதங்களில் பா.ஜ.க. மாயாவதி தலைமையிலான ஆட்சியையும் கவிழ்த்த வரலாறும் மறுக்க முடியாதது அல்லவா?
தேர்தலில் வெல்ல இடஒதுக்கீடு
இன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தொண்டால் சமூகநீதிக் கொள்கை ஆழமாக வேர் ஊன்றி - ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி விட்டதனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால்கூட இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால், அது சமூக நீதிக்கும் அதனை நிலைக்கப் போராடிய தந்தை பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி அல்லவா?
மண்டல் காற்று இன்று வடக்கே எப்படி வேகமாக அடிக்கிறது பார்த்தீர்களா?
நிலைமை மாறிவிட்டது
ஒடுக்கப்பட்டோர் அழுத்தி வைக்கப்பட்டிருப்பதும் அவர்கள் மற்றவர்களோடு சமமாக வந்துநிற்கும் வரை (எதுவரை இடஒதுக்கீடு என்று கேட்போருக்கு இதுவே சரியான பதில்) தேவை என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவரால் இப்போது பேசப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.
இடஒதுக்கீடு கேட்கும் பிராமணர்கள்
எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று "பிராமணர் சங்கத்தவர்" கேட்கும் நிலை வந்ததே, அது பெரியாருக்கு கிடைத்த மற்றொரு வெற்றி அல்லவா? அதுபோலவே இதுவும்!
அன்று ராஜாஜி
1938இல் ஹிந்தியைக் கட்டாயமாக தமிழ்நாட்டில் திணித்து எதிர்ப்புக்கு ஆளான சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களே. 1967இல் ஹிந்தி எப்போதும் வேண்டாம்; இங்கிலீஷ் எப்போதும் தேவை என்று கூறியது பெரியாரின் திராவிடர் இயக்க வெற்றி அல்லவா?
இன்று ஆர்.எஸ்.எஸ்.
அதுபோலத்தான் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் புதிய திருப்பமான அறிவிப்பும் - பிரகடனமும் ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது என்பதற்காக நாம் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பவர்கள் அல்ல.
இருந்தாலும் வரவேற்கிறோம்..
எதற்காகக் கூறுகிறார்கள் என்பதைவிட இதைக் கூறியாக வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகி விட்டதால் அவர்கள் கூறுகிறார்கள் என்றாலும் நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இதில் என்றும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு!
உறுதியாக இருக்க வேண்டும்
வெறும் தேர்தல் பேச்சாக மட்டும் இருந்து விடக் கூடாது. இது தேர்தலோடு போகும் பிரச்சினை அல்ல; அடுத்த தலைமுறைகளின் மான, உரிமை வாழ்வை வளப்படுத்தும் பிரச்சினை.
தனியார் துறை இடஒதுக்கீடு
இத்திருத்தம் தனியார் துறை இடஒதுக்கீடு வரை தொடரட்டும்! 136ஆவது ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழாவில் அவரது தொலைநோக்கிற்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.
இவ்வாறு கி. வீரமணி கூறியுள்ளார்.