சுவாதி கொலை.... பின்தொடர்ந்த நபரை தேடும் போலீஸ்... கொலையாளியை பிடிப்பதில் திணறல்
சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் தொலைபேசிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுவாதியை பின்தொடர்ந்த நபர்தான் கொலையாளியா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினாலும், குற்றப் பின்னணி உள்ளவர்தான் இந்த படுகொலையில் ஈடுபட்டுள்ளார் என்று ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார். குற்றவாளி விரைவில் பிடிபடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பெண் பொறியாளர் சுவாதியின் படுகொலை தொடர்பாக குற்றவாளி என சந்தேகப்படும் நபரின் வீடியோவை வெளியிட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, சுவாதியின் தொலைபேசிக்கு வந்த 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் தொடர்பாக அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சூளைமேடு கங்கை யம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளம்பெண் சுவாதி, 24, மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர். அலுவலகத்துக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி அளவில் வந்த இவர், மர்ம நபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது சென்னை மக்கள், ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட்டுள்ளது. ரயில்வே போலீஸார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பின்தொடர்ந்த நபர்
ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். இதுபற்றி தந்தையிடம் சுவாதி அப்போதே தெரிவித்ததாக கூறப்படு கிறது. அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையாளியா? என்றும் விசாரணை நடக்கிறது.
விசாரணை வளையத்தில்
கொலை செய்யப்பட்ட சுவாதி, வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் சுவாதியின் நண்பர்களிடமும், வாடகை கார் ஓட்டுநர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாதியின் முகநூல்
சுவாதியின் ஃபேஸ்புக் பக்கங்களில் அவர் காதல் வயப்பட்டிருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அந்த வயதுக்கே உரிய எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லும் சில சினிமா காட்சிகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
படிப்பும் வேலையும்
சுவாதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்ததாக தகவல் வெளியான தகவல் தவறானது. வண்டலூர் அருகே உள்ள தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் படித்தவர் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார் சுவாதி. 2014ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜீனியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கிண்டல் மீம்ஸ்கள்
நடிகர் மாதவன் அவருக்கு ஃபேவரைட் ஹீரோ போல... அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஐடி நிறுவனத்தின் விஷயங்களை கிண்டல் செய்யும் மீம்ஸ்களை மட்டுமே அதிகம் பகிர்ந்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற தங்களை இடஒதுக்கீடு எப்படி பாதிக்கிறது என்கிற மீம்ஸையும்கூட பகிர்ந்திருக்கிறார்.
தப்பித்த கொலையாளி
சுவாதியை கொலை செய்த குற்றவாளி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து, பின்பக்கமாக சென்று, வலதுபுறம் இருந்த சுவரில் ஏறி குதித்துள்ளார். பின்னர், அங்குள்ள 7வது குறுக்கு தெரு வழியாக அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வீதி வீதியாக தேடல்
சுவாதியில் வீட்டில் இருந்து ரயில் நிலையம் வரை உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் சோதனை செய்கின்றனர். சூளைமேடு பகுதியில் இருக்கும் ஒரு அரசு வங்கியின் சிசிடிவி கேமராவை சுமார் 2 மணி நேரம் போலீசார் சோதனை செய்தனர்.
ஆதார் உதவியுடன் துப்பு துலக்க முடிவு
ரயில் பாதையில் கைப்பற்றப்பட்ட பட்டாக் கத்தி மற்றும் சுவாதியின் செல்போன் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு, அவரது நண்பர்கள், சக ஊழியர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆதார் தகவல் தொகுப்பில் அனைவரது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
குற்றவாளி பிடிபடுவான்
பட்டாக் கத்தியில் பதிவான ரேகைகளை அவற்றோடு ஒப்பிட்டு, குற்றவாளியை பிடிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆதார் அட்டை பெற்றவராக இருந்தால், இதன்மூலம் அவரை எளிதாக பிடிக்க முடியும் என்று ரயில்வே போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தனிப்படை தேடுதல் வேட்டை
இதற்கிடையே, ரயில்வே போலீஸ் டிஐஜி ஜே.பாஸ்கரன் தலைமையில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய டிஐஜி பாஸ்கரன் சுவாதி கொலை குற்றவாளியை 2 டிஎஸ்பிக்கள், 4 இன்ஸ்பெக்டர்களுடன் பல்வேறு குழுக்களாக தேடி வருகிறோம் என்றார்.
காதல் விவகாரமா?
தாம்பரம், செங்கல்பட்டு, ஈரோடு, கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த ரயில்வே இன்ஸ்பெக்டர்களும் இக்குழுவில் உள்ளனர். குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரால்தான் இதுபோன்ற கொடூர கொலையில் ஈடுபடமுடியும். இது திட்டமிட்ட படுகொலை. ஒருதலைக் காதல் விவகாரமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளியைக் கண்டுபிடிப்போம்.
கண்காணிப்பு கேமராக்கள்
ரயில்வே நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு ரயில்வே பாதுகாப்பு படையுடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்துவது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம் என்றார் டிஐஜி பாஸ்கரன்
புகார் எண் அறிவிப்பு
சுவாதி கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் தமிழகத்தின் ரயில்வே போலீசாருக்கு தெற்கு ரயில்வே முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் 84 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ரயில் பயணத்தின்போது ஏற்படும் பிரச் சினைகள் குறித்து பெண்கள் புகார் அளிக்கும் வகையில் ‘182' என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் இரங்கல்
சுவாதி கொலைக்கு ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து உதவிகளையும் செய்யுமாறு ரயில்வே வாரிய உறுப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பை அதிகரியுங்கள்
அப்போது, சமூக ஆர்வலர்கள் பலரும், ரயில் நிலையங்களில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று டுவிட்டரில் வலியுறுத்தினர்.
சுவாதி படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடைமேடையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.