விதி எண் 110ன் கீழ் ஜெ. அறிவித்த திட்டங்கள்... ஸ்டாலின் கேள்விக்கு ஓ.பி.எஸ். பதில்
சென்னை: ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தபோது சட்டசபையில், விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட 666 திட்டங்களில் 236 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. அவை கூடியதும் முதலில் மறைந்த உறுப்பினர்கள் 6 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப் பட்ட திட்டங்களின் நிலை குறித்து திமுக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இதில் பேசிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அடுக்கடுக்காக அறிவித்த தமிழக அரசு அதை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்தது என அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :-
மக்கள் முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களால் சட்டசபையில், விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு பொய்யான குற்றச்சாட்டை தி.மு.க.வினர் அடிக்கடி எழுப்பி வருகின்றனர். அதிலும், குறிப்பாக சட்டமன்ற தி.மு.க. குழுவின் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதே, 110 விதியின் கீழ் செய்யப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஒரு உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
அதிமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் 666 திட்டங்கள் அறிவிக்கப் பட்டது. இதில், 236 திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளன. மீதமுள்ள 430 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
2011-12 ஆம் ஆண்டு விதி எண் 110-ன் கீழ், 51 திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 51 திட்டங்களுக்கும் அரசாணைகள் வெளியிடப்பட்டு, 39 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 11 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஒரு திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
2012-13 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ், 87திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 83 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 48 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 34 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் ஒரு திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 4 திட்டங்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன.
2013-14 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ், 292 திட்டங்களை அறிவித்தார்கள். இதில் 287 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 126 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 161 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஒரு திட்டம் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. 4 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டி உள்ளது.
2014-15 ஆம் ஆண்டு, விதி எண் 110-ன் கீழ் 236 திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்தார்கள். இதில் 116 திட்டங்களுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு, 5 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 111 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
3 திட்டங்கள் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளன. 117 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டி உள்ளது.
நிறைவேற்றப்பட்ட திட்டங்களில், சிலவற்றை இந்த அவையில் எடுத்துக் கூற விரும்புகிறேன்' என இவ்வாறு அவர் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக, பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்த நீண்ட நெடிய அறிக்கை ஒன்றையும் அவர் வாசித்தார்.