சட்டமன்றத்தின் மிக முக்கிய அவை முன்னவர் பொறுப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம்
சென்னை : சட்டமன்றத்தின் மிக முக்கிய அவை முன்னவர் பொறுப்புக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ளார்.
சட்டசபையில் அவை முன்னவர் என்ற பொறுப்பு மிகவும் கண்ணியத்துக்கு உரிய பொறுப்பாகும். அவையின் அலுவல் நேரங்களில் முதல்வர் இல்லாத போது, ஏற்படும் பிரச்சினைகளில் சமரசம் செய்யும் பொறுப்பு அவை முன்னவருக்கு உள்ளது.
சட்டமன்றத்தில் நீண்டகால உறுப்பினராக இருப்பவர்களே அவை முன்னவராக தேர்வு செய்யப்படுவார்கள். காரசாரமான விவாதங்கள், கூச்சல் குழப்பங்கள் எழும்போதெல்லாம், சபாநாயகரின் உத்தரவைவிட அவை முன்னவரின் நடுநிலையான ஆலோசனைகளே பெரும்பாலும் அமைதிக்கு வழிவகுக்கும். அந்த வகையில், நெடுஞ்செழியன், க.அன்பழகன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்தப் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பளித்ததையடுத்து, அடுத்து அவர் அந்தப் பதவியை இழந்தார். பின்னர், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
எனவே, அவையில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே வகித்து வந்த அவை முன்னவர் பொறுப்பில் அவர் நீடிக்க முடியாது என்பதால், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தமிழ்நாடு சட்டசபையின் முன்னவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதையடுத்து, தற்போது நிதியமைச்சராக மட்டும் ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வருகிறார். எனவே அவர் ஏற்கனவே வகித்த சட்டமன்ற அவை முன்னவர் பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் குறித்து தமிழ்நாடு சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 24 ஆம் தேதி தமிழக சட்டமன்றம் கூட உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.