சசிகலா போல ஜெ. நாற்காலியில் அமராத ஓ.பன்னீர்செல்வம்... பழைய அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றார்
மறைந்த ஜெயலலிதா முதல்வராக அமர்ந்த நாற்காலியில் அமராமல் தன்னுடைய பழைய அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றார் ஒ. பன்னீர்செல்வம்.
சென்னை: தலைமை செயலகத்தில் உள்ள தனது பழைய அறையிலேயே முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் நேற்று பொறுப்பேற்றார். அவர் நிதியமைச்சராக இருந்த அதே அறையில் இருந்து முதல்வராக பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவையொட்டி, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்று 4 நாட்கள் ஆகியும் தலைமை செயலகம் வந்து முதல்வராக பொறுப்பேற்காமல் இருந்தார்.
இந்நிலையில், நேற்று தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிவடைந்ததும் சரியாக 12.30 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே நிதியமைச்சராக இருந்த அறைக்கே சென்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னைக் கோட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வருக்கான தனி அறை உள்ளது. அந்த அறையில்தான் தற்போது மறைந்த ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்று பணியாற்றினார். இதே போன்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் இதற்கு முன்பிருந்த முதல்வர்கள் அனைவரும் இந்த அறையில் இருந்துதான் பணியாற்றி உள்ளனர்.
ஆனால், ஜெயலலிதா மறைவையொட்டி முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தான் நிதியமைச்சராக பணி செய்த அறையிலேயே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அவரது அறையின் நுழைவாயிலில் இருந்த நிதியமைச்சர் என்ற பெயர் பலகை அகற்றப்பட்டு, "ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர்" என்று புதிய பெயர் பலகை மாற்றப்பட்டது.
கடந்த 2015ம் ஆண்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றபோதும் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் சில மாதங்கள் பணியாற்றினார். அப்போதும் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் அறைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.